மஹிந்த, மெரியட் ஹோட்டல் மர்மங்கள்!

342
டுபாயில் உள்ள மெரியட் ஹோட்டல் நிலோனா கோபுரத்தில் கட்டப்பட்டுள்ளது. இக்கோபுரம்கூட மஹிந்தவுக்கே சொந்தம் என்று சொல்லப்படுகின்றது. இக்குற்றச்சாட்டுகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இப்போது வரை முற்றாக நிராகரித்து வருகின்றார்.

டுபாயில் உள்ள மெரியட் ஹோட்டல் குறித்து இலங்கை ஊடகங்களில் கடந்த வருடம் அடிக்கடி செய்திகள் வெளிவந்தன. இதன் உரிமையாளராக இலங்கையில் பிறந்த வர்த்தகர் நந்தன லொக்குவிதான உள்ளார். ஆனால் தற்போது வேறுவிதமான வதந்திகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை தொடர்புபடுத்தி உலாவுகின்றன. இதே நேரம் இக்குற்றச்சாட்டுகளை மஹிந்த ராஜபக்ஸ இப்போது வரை முற்றாக நிராகரித்து வருகின்றார்.

இவ்விடயத்தில் மஹிந்த ராஜபக்ச நிதி மோசடி குற்றப் புலனாய்வு பொலிஸ் பிரிவை மிக கடுமையாக சாடியுள்ளார். டுபாயில் உருக்கு கம்பனியோ அல்லது ஹோட்டலோ இவருக்கு சொந்தமாக கிடையாது என்று தெரிவித்துள்ளார். ஆனால் நிதி மோசடி குற்ற புலனாய்வு பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளார்கள்.

டுபாயில் மஹிந்த ராஜபக்ச மிக பெரிய அளவில் முதலீடு செய்துள்ளார், சத்திய கடதாசி மூலமாக நந்தன லொக்குவிதானவை டம்மியாக நியமித்துள்ளார், மஹிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட நிதி ஆலோசகர் என்று வர்ணிக்கப்படுகின்ற சஜின் வாஸ் குணவர்தன மூலமாகவே நந்தன லொக்குவிதான சில வருடங்களுக்கு முன்னர் மஹிந்தவுக்கு அறிமுகமானார், வாஸ் குணவர்தனவே வேண்டிய ஆவணங்களை தயாரித்துக் கொடுத்தார் என்று வலுவாக சந்தேகிக்கின்றனர். நந்தன லொக்குவிதானவின் சொந்த இடம் நாத்தாண்டியா, வர்த்தகத்தில் நஷ்டம் அடைந்து காணாமல் போய் இருந்தவர் என்று கூறப்படுகின்றது.

புதிய மெரியட் ஹோட்டல் நிலோனா கோபுரத்தில் கட்டப்பட்டு உள்ளது. இக்கோபுரம்கூட மஹிந்தவுக்கே சொந்தம் என்று சொல்லப்படுகின்றது. ஹோட்டலில் நட்சத்திர ஆடம்பர அறைகள், சகல வசதிகளுடனும் கூடிய கேட்போர் கூடங்கள், அற்புதமான உணவகங்கள் ஆகியன காணப்படுகின்றன. நகரத்தின் வர்த்தக மையப் பகுதியிலேயே ஹோட்டல் அமையப் பெற்றுள்ளது. டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 10 நிமிடங்களில் இந்த நான்கு நட்சத்திர ஹோட்டலை வந்தடைய முடியும்.

நுட்பமாக திட்டமிடப்பட்ட வகையில் 35 விருந்தினர் அறைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. ஏராளமான ஆடம்பர வசதிகளை கொண்டிருக்கின்றன. உதரணமாக குளியல் அறைகள் மாபிள்களால் ஆக்கப்பட்டவை.

மேலும் ஹெல்த் கிளப், கூரை மேல் அமைக்கப்பட்டு உள்ள நீச்சல் தடாகம், நீராவிக் குளியல் அறை, விளையாட்டு அறை ஆகிய சூப்பர் வசதிகளை ஹோட்டல் கொண்டுள்ளது.

இதே நேரம் நிலோனா கோபுரத்தின் ஒரு பகுதியில்தான் உருக்குக் கம்பனியும் அமைக்கப்பட்டுள்ளது. இது 1998ம் ஆண்டு முதல் இயங்குகின்றது. 60 பேர் வரை கடமையாற்றுகின்றனர். கட்டிட கைத்தொழில் துறைக்கு தேவையான உருக்குகளை சீனாவில் இருந்து இறக்குமதி செய்து விற்பதுதான் இக்கம்பனியின் பிரதான வர்த்தக நடவடிக்கை ஆகும்.

ஆனால் அநாமதேய கடிதம் ஒன்றின் பெயரிலேயே இவை எல்லாம் மஹிந்தவுக்கு சொந்தமாக இருக்க வேண்டும் என்கிற கோணத்தில் விசாரிக்கின்றனர் என்று பொலிஸார் கூறுகின்றமை வேறு விதமான சந்தேகங்களை உருவாக்கத்தான் செய்கின்றது.

இதனாலேயே நிதி குற்ற புலனாய்வு பிரிவு ஐக்கிய தேசிய கட்சியின் விஸ்தரிப்பு என்று மஹிந்தவின் விசுவாசிகள் அடித்துக் கூறுகின்றனர்.

SHARE