இப்பொழுது எல்லாம் ஏதாவது விசாரணைகள் என்றால் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தம்பியுமான கோத்தபாய ராஜபக்ச பதறுவதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த புதன்கிழமை நிதிமோசடி குறித்த விசேட பொலிஸ்பிரிவின் முன்னிலையில் ஆஜரான வேளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மிகவும் பதட்டத்துடன் காணப்பட்டதாகவும், மிக் விமான கொள்வனவில் முறை கேடுகள் ஏதாவது இடம்பெற்றிருந்தால் அதற்கு தான் பொறுப்பல்ல என்றும்.
அதற்கு முன்னாள் விமானப்படை தளபதியே காரணம் என பதட்டத்தோடு தெரிவித்திருக்கின்றார்.
புதன் கிழமையன்று ஆறு மணி நேரம் இடம்பெற்ற இந்த விசாரணைகளின் பொது கோத்தபாயவிடம் முதலில் மிக் விமானக் கொள்வனவு குறித்த கேள்விகளே எழுப்பப்பட்டன.
இதற்கு சற்று தடுமாற்றத்தோடும், பதட்டத்தோடும் அவரின் கைநடுங்கவும் பதிலளித்திருக்கின்றார். இதன் போது கோத்தபாய ராஜபக்ச உரிய முறையிலேயே விமான கொள்வனவு இடம்பெற்றதாக குறிப்பிட்டார்.
ஆனால் அவரின் பதிலில் திருப்தியடையாத நிதிமோசடி தொடர்பான பொலிஸார் துருவிதுருவி விசாரிக்கத் தொடங்கியதும் கோத்தபாய முன்னாள் விமானப்படை தளபதி எயர் மார்சல் ரொசான் குணதிலக மீது சட்டென்று பழியை போட்டார்.
விமான கொள்வனவில் நிதிமோசடிகள் ஏதேனும் இடம்பெற்றிருக்குமாயின் அதற்கு முன்னாள் விமானப்படைத் தளபதியே காரணம் என தெரிவித்த கோத்தபாயராஜபக்ச, இதற்காக என்னிடம் குற்றம் சுமத்த முடியாது என்றும் சமாளித்திருக்கின்றார்.
இதேவேளை இந்த மிக் விமானங்களை பயன்படுத்தியதாலேயே தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தை வெற்றி கொள்ள முடிந்தது என்பதை மக்கள் உணரவேண்டும், இது குறித்து எவ்வித விசாரணைகளும் இடம்பெறக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.
லங்கா மருத்துவமனையில்( இலங்கை அப்பலோ) அவரிற்குள்ள பங்குகள் குறித்தும் அவரிடம் விசாரணை இடம்பெற்றது. குறிப்பிட்ட மருத்துவமனையின் பங்குகளை கோத்த பாயவின் நெருங்கிய நண்பரான டிலித் ஜெயவீர தனக்கு சாதகமான விதத்தில் அதிகரித்து காட்டினார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் அதன் பங்குகளை அவர்கள் இந்திய நிறுவனமொன்றிற்கு விற்பனை செய்துள்ளனர்.
விசாரணைகளை முடித்து வெளியில் வரும் பொழுது அவரின் முகத்தில் வேர்வைகள் காணப்பட்டதாகவும், தன்னுடைய மெய்ப்பாதுகாவலர்களை அழைத்து வாகனத்தை உள்ளே கொண்டு வருமாறு அழைத்துள்ளார்.
இதேவேளை கோத்தபாய ராஜபக்ச ஊடகவியலாளர்களைப்பார்த்தும் பயப்படுவதாகவும் தெரியவருகின்றது.
அண்ணனின் ஆட்சியில் பத்து வருடமாக தமிழ் முஸ்லிம் இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் கோத்தபாயவின் வழிகாட்டலில் கொன்று புதைக்கப்பட்டனர் என்றும், வன்னி இறுதிக்கட்ட போரின் போது சரணடைந்தவர்களை கோத்தாபாயவின் வழிகாட்டலில் தான் பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதையும் சுட்டிக்காட்டும் அரசியல் அவதானிகள் அப்பொழுது எல்லாம் இவருக்கு தமிழ் இளைஞர்களை கைது விசாரணை நடத்துவது என்றாலே அளவு கடந்த ஆசை என்கின்றார்கள்.
தமிழ் இளைஞர்களை அடிக்கடி நான்காம் மாடிக்கு அழைத்து விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தி சித்திரவதை செய்ததையெல்லாம் கோத்தபாய மறந்திருக்க மாட்டார் என்றும் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுவதோடு, அந்த வினை தான் இப்பொழுது இவரை சுற்றி ஆட்டிப்படைப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.