மன்னார், வங்காலையை பகுதியில் வியாழக்கிழமை (4) மாலை முதல் காணாமல் போன மூன்று மாணவர்களில் இருவர், இன்று வெள்ளிக்கிழமை (05) காலை மீட்கப்பட்டுள்ளனர்

348

 

மன்னார், வங்காலையை பகுதியில் வியாழக்கிழமை (4) மாலை முதல் காணாமல் போன மூன்று மாணவர்களில் இருவர், இன்று வெள்ளிக்கிழமை (05) காலை மீட்கப்பட்டுள்ளனர் என்று மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். மன்னார், வங்காலையில் தரம் 7இல் கல்வி கற்கும் 12 வயதுடைய மூன்று மாணவர்களே இவ்வாறு காணாமல் போயிருந்தனர். அவர்களில் டானியல் மற்றும் அஜித்குமார் ஆகிய இரு மாணவர்கள் மன்னார் பஸ் தரிப்பிடத்தில் வைத்து மன்னார் பொலிஸாரால் இன்று மீட்கப்பட்டுள்ளனர்.

Mannar

மேலும், காணமல் போன சாலின் மார்க் என்ற மாணவன் தொடர்பில் தகவல்கள் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மூன்று மாணவர்களும் வங்காலையில் இருந்து மன்னாருக்கு பஸ்ஸில் நேற்று மாலை வருகை தந்து, மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் பஸ்ஸில் யாழ்ப்பாணம் சென்றுள்ளனர். பின்னர் குறித்த மூன்று மாணவர்களும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்லும் பஸ்ஸில் பயணித்து வவுனியாவில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் டானியல் மற்றும் அஜித்குமார் ஆகிய இருவரும் வேறு இடங்களுக்குச் செல்ல மறுத்த நிலையில் அவர்கள் இருவரும் இன்று வெள்ளிக்கிழமை (05) காலை 6 மணியளவில் வவுனியாவிலிருந்து மன்னாருக்குத் திரும்பிவிட்டனர்.

மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விரைந்து சென்ற மன்னார் பொலிஸார் குறித்த இருவரையும் மன்னார் பஸ் தரிப்பிடத்திலிருந்து மீட்டு மன்னார் பொலிஸ் நிலையத்தில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர் தடுப்பு பிரிவில் ஒப்படைத்துள்ளனர். சாலியன் மார்க் வவுனியாவிலிருந்து எங்கு சென்றார் என்ற விடயம் இதுவரை தெரியவில்லை. மீட்கப்பட்ட இரு மாணவர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள மன்னார் பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE