சனல் 4 வெளியிட்ட இலங்கை குறித்த காணொளியை சர்வதேச நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கு சர்வதேச சட்ட அமைப்பு தீர்மானித்துள்ளதாக சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைப் போர் தொடர்பில் இந்த காணொளியில் விபரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரச படையினருக்கு எதிராக பிரிட்டன் சனல்4 ஊடகத்தினால் தயாரிக்கப்பட்ட காணொளி சர்வதேச நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அந்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், இந்த காணொளியில் உள்ளடக்கப்பட்டுள்ள காட்சிகள் இணையத்தளங்களில் தரவேற்றப்பட்டிருக்கவில்லை என சர்வதேச நீதி அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. அமைப்பின் சட்டத்தரணிகள், குறித்த காணொளியின் உண்மைத் தன்மை குறித்து விசாரணை செய்யவுள்ளனர்.
கெலம் மக்ரேவினால் தயாரிக்கப்பட்ட இந்தக் காணொளியின் காட்சிகள் செல்லிடப் பேசி ஊடாக எடுக்கப்பட்டவை என்ற போதிலும் எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பதனை உறுதி செய்ய முடியாத நிலைமை காணப்படுகின்றது என சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளது.