மகிந்த ராஜபக்சவை தேர்தலில் வெற்றி பெற வைப்பதற்கு இம்முறை நாட்டில் பிரபாகரன் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இன்று பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.
கூட்டணியில் சிலர் மஹிந்தவை பிரதமராக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேவிடம் வலியுறுத்துகின்றார்கள்.
மீண்டும் மஹிந்த ராஜபக்சவை அதிகாரத்திற்கு கொண்டு வந்து பழைய முறையிலேயே ஊழல் மோசடிகளை மேற்கொண்டு வெள்ளை வான் கலாச்சாரத்தை ஆரம்பித்து இந்த நாட்டில் ஆட்சி செய்வதே சிலருக்கு அவசியமாக இருக்கின்றது.
மஹிந்த ராஜபக்ச ஆட்சியை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வந்து மீண்டும் இந்நாட்டில் குடும்ப ஆட்சியை ஆரம்பிக்க வேண்டுமா? அப்படி இல்லை என்றால் இந்நாட்டில் நல்லாட்சி உருவாக்கி நாட்டின் எதிர்காலத்தை மேம்படுத்த வேண்டுமா என தேர்தலின் போது மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் வேட்பாளராக வேண்டும் என்றால் தேர்தலில் களமிறங்க வேண்டும்.
எனினும் அவரை இம்முறை வெற்றி பெற செய்வதற்கு நாட்டில் பிரபாகரன் இல்லை.
எனவே இம்முறை மஹிந்த தோற்பது உறுதி.
நான் பிரதமராவதற்கு நினைப்பது சுகபோகம் அனுபவிப்பதற்கல்ல.
நாட்டை வளர்ச்சியான பாதைக்கு கொண்டு சென்று இளைஞர்களுக்கு சிறப்பானதொரு எதிர்காலத்தை பெற்றுக்கொடுப்பதே எனது அவசியமாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்தவுக்கு அழைப்பு விடுத்த ரணில்
எதிர்வரும் பொது தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு களமிறங்குமாறு தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரசிங்க தெரிவித்துள்ளார்.
தம்புள்ளை ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
தேர்தலுக்கு அஞ்சுவதென்றால் வீட்டோடு இருக்குமாறு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ராஜபக்ச ஆட்சியை தேர்தலின் மூலம் தோல்வியடைய செய்ததாகவும், இம்முறை பொது தேர்தலில் மஹிந்த ராஜபக்ச ஆட்சியை குழி தோண்டி புதைக்கவுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.