ஜனநாயக பலமே எம்மிடம் தற்போதுள்ளது. அதனை சரியான முறையில் பயன்படுத்துவது ஊடாகவே எமது எதிர்காலத்தை பாதுகாத்துக்கொள்ளமுடியும். அதற்கான தீர்க்கமான தருணமே எதிர்வரும் பொதுத் தேர்தலாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இந்நாட்டில் எமது உரிமைகளுக்காக ஜனநாயக ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் கடந்த காலங்களில் போராட்டங்களை முன்னெடுத்தோம். ஈற்றில் அவை பலமிழக்கச் செய்யப்பட்டது. தற்போது மீண்டும் ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம்.
யுத்தம் நிறைவடைந்து 6 ஆண்டுகள் கடந்துள்ள போதும் எமது உரிமைகளுக்காகவும் அபிலாசைகளுக்காகவும் சுதந்திரமான கருத்துக்களையோ போராட்டங்களையோ மேற்கொள்வதற்கு உரிய சூழல் ஏற்படுத்தப்படவில்லை.
இராணுவ புலனாய்வாளர்களின் விசேட கண்காணிப்புக்களுக்கு மத்தியிலும் இனவாதிகளின் புலிச் சாயச் சித்திரிப்புக்களுக்கு மத்தியிலுமே எமது ஜனநாயக செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டியிருக்கின்றது .
தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த காலங்களில் காணப்பட்ட அரசாங்கங்களுடனும் தற்போது உள்ள புதிய அரசாங்கத்துடனும் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடிப் பிரச்சினைகள், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிதல், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விடுவிப்பு, மீள்குடியேற்றம், அரச அதிபர்களின் இடம்மாற்றம், உட்பட நிரந்தர தீர்வு குறித்தும், பேசுப்பட்டபோதும் அதில் ஆக்கபூர்வமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.
ஆகவே தற்போது தமிழ் மக்கள் தமது உரிமைகளையும், அபிலாசைகளையும் வென்றெடுப்பதற்காக தென்னிலங்கைக்கும், சர்வதேச சமுகத்துக்கும் இனப்பிரச்சினை தொடர்பில் செய்தியொன்றை அறிவிக்கவேண்டிய தீர்க்கமான தருணமொன்று ஏற்பட்டுள்ளது. பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்துவதனூடாகவே மக்கள் தமக்கான இலக்குகளை இலகுவாக அடையமுடியும் என்பதே யதார்த்தமாகும்.
எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்குக் கிழக்குத் தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டு தமக்குள்ள ஜனநாயக பலமான வாக்குகளை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அளிப்பதனூடாகவே அந்த இலக்கை எட்டமுடியும் என்று அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.