ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் ‘தேசத்துக்கு உயிர் கொடுப்போம் மஹிந்தவுடன் ஒன்றிணைவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் இன்று வெள்ளிக்கிழமை அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது. கூட்டத்தை ஆரம்பிக்கிறார் மஹிந்த!

339
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் ‘தேசத்துக்கு உயிர் கொடுப்போம் மஹிந்தவுடன் ஒன்றிணைவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் இன்று வெள்ளிக்கிழமை அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.
10872729_10152413876761467_6989383274636789674_o

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.

இக்கூட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்ட தினேஷ் குணவர்தன, இலங்கை வரலாற்றில் மிகவும் பிரபல்யமான புண்ணியஸ்தலங்கள் அமைந்துள்ள அநுராதபுரத்திலிருந்து மஹிந்தவை பிரதமராக்குவதற்கான வெற்றி ஒலியை எழுப்பவுள்ளோம்.

ஜனநாயகம் மிகவும் மோசமாக அமைந்துள்ளது. வெற்றிகொள்ளப்பட்ட பூமி மீண்டும் அபாயத்தை நோக்கிச் செல்கின்றது. இதனைத் தடுக்கவேண்டும்.

ஜனாதிபதி மைத்திரிபால அண்மையில் விடுத்திருந்த பகிரங்க அறிவிப்பில் மத்திய வங்கி ஆளுநரை பதவி விலக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தான் கோரிக்கை முன்வைத்ததாகத் தெரிவித்திருந்தார். இதனால் ரணில் கொள்ளையர்களைப் பாதுகாக்கின்றார் என்பது தெளிவாகின்றது என்றார்.

இது தொடர்பாக விமல் வீரவன்ஸ கருத்துத் தெரிவிக்கையில்:

தேசத்துக்கு உயிர் கொடுங்கள்’ என்ற தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரத்தை இம்முறை நாங்கள் முன்னெடுக்கவுள்ளோம். எமது கன்னி தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை அநுராதபுரத்தில் மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அதற்கு முன்னர் சர்வமத வழிபாடுகளை ஏற்பாடு செய்துள்ளதுடன், வேட்பாளர்களிடமிருந்து சத்தியப்பிரமாணம் ஒன்றையும் பெறவுள்ளோம். நாங்கள் இம்முறைத் தேர்தலில் ‘தேசத்துக்கு உயிர் கொடுங்கள்’ என்ற தொனிப்பொருளை முன்வைத்தமைக்குப் பல காரணங்கள் உள்ளன.

அதாவது, 2005ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கை உயிரற்றதாகவே இருந்தது. பின்னர் மஹிந்த வருகையைத் தொடர்ந்தே நாட்டுக்கு உயிர் கிடைத்தது. ஆனால், மஹிந்த இல்லாத புதிய அரசால் தேசத்தின் உயிர் மீண்டும் இல்லாது போயுள்ளது.

2005ல் நாட்டுக்கு உயிர் கொடுத்த தலைமையை 2015ஆம் ஆண்டில் மீண்டும் பதவிக்குக் கொண்டுவருவதன் மூலம் நாட்டை ஆபத்திலிருந்து பாதுகாக்கமுடியும். கோப் அறிக்கையை வெளியிடுவதன் மூலம் திருடர்கள் மாட்டிக்கொள்வார்கள் என்பதைத் தெரிந்துகொண்டே பிரதமரைப் பாதுகாக்கும் வகையில் மைத்திரி நாடாளுமன்றத்தைக் கலைத்தார் என்று அவரே அறிவித்திருந்தார்.

அத்தியாவசியப் பொருள்களின் விலைகளை தேர்தலை இலக்காக வைத்து குறைத்துள்ளனர். ஓகஸ்ட் 17ம் திகதி நெருங்கும்போது மக்களுக்கு இலவசமாக உணவு வழங்குவதாகவும் அறிவிப்பார்களாயின் அதற்கும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மைத்திரிபால சிறிசேனவின் அறிவிப்பால் மஹிந்தவின் அரசியல் தங்கியுள்ளது என்றால் அது பிழையான கணிப்பாகும். நாங்கள் தேர்தலில் வெற்றிபெறுவோம் என்பது உறுதியான பின்னரே களத்தில் இறங்கியுள்ளோம்.

மைத்திரியின் அறிவிப்பால் சு.கவில் அவருக்கு இருந்த சிறு ஆதரவு இல்லாது போயுள்ளது.

தேர்தல் சட்டங்கள் பற்றி கோஷம் எழுப்பிய ஐ.தே.க. தற்போது ஆட்சிக்கு வந்தபின்னர் முன்னெடுக்கும் செயற்பாடுகள் அனைத்தும் தேர்தல் சட்டதிட்டங்களுக்கு முரணானவை. அதிலும் குறிப்பாக, கொழும்பில் நீதி அமைச்சரும், நீதி பிரதியமைச்சருமே அதிகளவு தேர்தல் சட்டதிட்டங்களை மீறியுள்ளனர்.

அது மட்டுமல்லாது, வானொலி அலைவரிசை ஒன்றை ஆரம்பித்து அதில் முற்றுமுழுதும் பக்கச்சார்பான செய்திகளை வெளியிடுகின்றனர். கோடிகளை இறைத்து உறுப்பினர்களைத் தம் பக்கம் இணைத்துக்கொள்ளும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன – என்றார்.

SHARE