தொடரை இழந்த இலங்கை அணி – வெற்றி வாகை சூடிய இந்திய அணி

145

மோசமான துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பின் மூலமாக தொடரை இழந்த இலங்கை அணி – அதிரடியாக விளையாடி வெற்றி வாகை சூடிய இந்திய அணி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 390 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்ப்பில் துடுப்பாட்டத்தில் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 166 ஓட்டங்களையும், சுப்மன் கில் 116 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் லஹிரு குமார மற்றும் கசுன் ராஜித ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர். அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 391 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 22 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 77 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இந்திய அணி சார்ப்பில் மொஹமட் சிராஜ் 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். போட்டியின் 42.5 ஆவது ஓவரில் விராட் கோலி அடித்த பந்தை தடுக்க முயன்ற ஜெப்ரி வென்டர்ஸே மற்றும் அஷேன் பண்டார ஆகியோர் ஒருவருடன் ஒருவர் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளதை அடுத்து இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து உபாதைக்கு உள்ளான ஜெப்ரி வென்டர்ஸேவிற்கு பதிலாக துனித் வெல்லாலகே அணியில் இணைக்கப்பட்ட போதிலும் அஷேன் பண்டாரவிற்கு பதிலாக யாரும் போட்டியில் இணைத்துக் கொள்ளப்படவில்லை. எனவே மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 3 – 0 என்கிற அடிப்படையில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE