இலங்கையின் ஏனைய மாகாணங்களில் உள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கும் 50,000/= வாழ்வாதார உதவி வழங்க வடக்கு அமைச்சர் டெனிஸ்வரன் திட்டவட்டம்… நாளை மன்னாரில் விசேட சந்திப்பு…
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சரால் உருவாக்கப்பட்ட சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் குடும்பங்கள், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள், யுத்தத்தில் உயிர்களை நீத்த போராளிகளின் குடும்பங்கள் ஆகியோருக்கான விசேட நிரந்தர வாழ்வாதாரத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக வடக்கில் உள்ள சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் குடும்பங்களை ஐந்து மாவட்டத்திலும் ஏற்க்கனவே அமைச்சர் சந்திப்புக்களை மேற்கொண்டு, பதிவு செய்யப்பட்ட 324 குடும்பங்களுக்கும் தலா ஐம்பதுனாயிரம் வீதம் வழங்கவுள்ள நிலையில், இலங்கையின் பல பாகங்களில் குறிப்பாக கண்டி, மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம், மாத்தளை, அனுராதபுரம், திருகோணமலை போன்ற மாவட்டங்களில் இருந்து சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்கள் அமைச்சருடன் தொடர்பு கொண்டு தாமும் மிகுந்த வறுமையோடும் சிரமத்தொடும் வாழ்வை நடத்தி வருவதாகவும் தமக்கும் இந்த உதவி திட்டத்தை வழங்க ஆவன செய்யுமாறும் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தமது இவ் விசேட திட்டத்தில் ஏனைய மாகாணங்களிலும் உள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கும் தலா ஐம்பதுனாயிரம் வீதம் வழங்கவுள்ளதாக அறிவித்ததன் பிரகாரம் நாளை 29-07-2015 புதன் காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டத்தில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் இவ்வாறு உள்ள அனைத்து மாவட்டத்திலும் உள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கான விசேட ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.