
இரு ஆண்டுகள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்து புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.
அந்த வகையில் 2021ஆம் ஆண்டு சவுத்தம்டனில் நடந்த முதலாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து கிண்ணத்தை கைப்பற்றியது.
இதனை தொடர்ந்து 2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021 முதல் 2023ஆம் ஆண்டு வரை நடைபெற்று வந்தது. இதில் 9 அணிகள் பங்கேற்று உள்நாட்டு, வெளிநாட்டு அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றன. மொத்தம் 27 தொடர்களில் 69 டெஸ்டுகள் நடத்தப்பட்டன. போட்டியின் வெற்றி பெறும் அணிக்கு 12 புள்ளியும், வெற்றி தோல்வி இன்றி முடிவடையும் போட்டிகளுக்கு 4 புள்ளியும் வழங்கப்பட்டன.
இதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் அவுஸ்திரேலியா 66.67 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தையும், இந்தியா 58.80 சதவீத புள்ளிகளுடன் 2வது இடத்தையும் பிடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
55.56 சதவீத புள்ளிகளுடன் 3வது இடத்தை பெற்ற தென் ஆப்பிரிக்கா நூலிழையில் வாய்ப்பை இழந்தது. நடப்பு சாம்பியன் நியூசிலாந்து 6வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.