இதில் இறுதிப் போட்டியில் இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) மோதினர்.
இறுதிப்போட்டி இரு கிளாசிக்கல் ஆட்டத்தை கொண்டது. இறுதிப்போட்டியின் முதலாவது சுற்று 35 ஆவது நகர்த்தலில் டிராவில் முடிந்தது.
இவ்விரு வீரர்களுக்கு இடையேயான இறுதிப் போட்டியின் 2 ஆவது சுற்று 23 ஆம் திகதி அரங்கேறியது.
இதில் 1 1/2 மணி நேரத்தில் அதாவது 30 ஆவது காய் நகர்த்தலுக்கு பிறகு இருவரும் ஆட்டத்தை டிராவில் முடிக்க ஒப்புக் கொண்டனர்.
அப்போது இருவரிடம் தலா 8 காய்கள் எஞ்சியிருந்தன. டிராவின் மூலம் இருவருக்கும் தலா அரைபுள்ளி வழங்கப்பட்டது.
இரு ஆட்டத்தையும் சேர்த்து 1 – 1 என்று சமநிலையில் இருக்கிறார்கள்.
தொடர்ந்து, வெற்றியாளரை முடிவு செய்ய டைபிரேக்கர் சுற்று நேற்று (24) மாலை தொடங்கியது. முதல் சுற்றில் நார்வே வீரர் கார்ல்சன் வெற்றி பெற்றார்.
இதனையடுத்து நடந்த 2 ஆவது சுற்று டிரா ஆனது. இந்த சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றால், ரேபிட் முறையில் 2 போட்டிகள் நடைபெறும் சூழல் இருந்தது.
ஆனால் 2 ஆவது சுற்று ஆட்டத்திலும் கார்ல்சன் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இதன் மூலம் உலக கிண்ண செஸ் இறுதி போட்டியில் நார்வே வீரர் கார்ல்சன் 6 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
இந்த உலக கிண்ண செஸ் போட்டியில் உலகின் முதன்மையான வீரரும், ஐந்து முறை உலக சாம்பியனுமான நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சனுக்கு இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா கடும் சவால் விடுத்திருந்தார்.
முதல் டைபிரேக்கர் சுற்றில் முதல் 10 நிமிடங்கள் சிறப்பாக விளையாடிய அவர் கடைசி 10 நிமிடத்தில் தடுமாறினார். இதனை நன்கு கணித்த கொண்ட கார்ல்சன் அவரை வீழ்த்தினார்.
இதற்கு முன் மூன்று முறை பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தியுள்ளார். முதன்முறை 2016 இல் தோற்கடித்த பொழுது 10 வயது வீரராக இருந்தார்.
இதனைத் தொடர்ந்து, 2018 இல் நடைபெற்ற விரைவான செஸ் போட்டியில் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்தார்.
கடந்த 2022 ஆண்டிலும், பிரக்ஞானந்தா மூன்றாவது முறையாக கார்ல்சனை தோற்கடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.