கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது.
குறித்த பரீட்சை எதிர்வரும் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதுடன், பரீட்சையை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உயர்தர பரீட்சை அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர பரீட்சார்த்திகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பரீட்சார்த்திகளுக்கான அறிவுறுத்தல்
“இந்த முறை ஒரு புதிய பாடமாக கொரிய மொழி சேர்க்கப்பட்டுள்ளது. அந்த பாடத்தைச் சேர்க்க, அட்டவணையில் சில சிறிய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது.
எனவே, முந்தைய அட்டவணையைப் பயன்படுத்த வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
ஏனெனில் சில வலைத்தளங்கள் இந்த அட்டவணையைக் தவறாக காட்டக்கூடும். பரீட்சார்த்திகளின் வசதிக்காக இந்த அட்டவணையை அனுமதிப்பத்திரத்தில் காட்டியுள்ளோம். அதனால் வேறு எங்கும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை”.
இதேவேளை, அனர்த்தம் ஏற்படக்கூடிய பகுதிகளில் அமைந்துள்ள உயர்தர பரீட்சை நிலையங்களுக்கு பதிலாக மாற்று பாடசாலைகளை தயார்படுத்தும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அநுராதபுரம், கெக்கிராவ, பொலன்னறுவை, பசறை, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹசலக்க ஆகிய பிரதேசங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
மேலும், பரீட்சார்த்திகள் கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் பரீட்சை மையத்திற்குச் செல்வதற்கு ஏதேனும் தடை இருக்கிறதா என்பதினை கண்டறிந்து, அருகில் உள்ள பேரிடர் மேலாண்மை மையத்தின் அவசர எண்ணை அழைத்து பரீட்சைக்கு தேவையான சூழலை தயார் செய்யவும். பரீட்சை எழுதுவதற்குத் தேவையான மனச் சூழலை உருவாக்கிக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, பரீட்சைக் காலங்களில், மேலதிக வகுப்புக்களை நடத்த வேண்டாம் எனவும் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் ஜீவராணி புனிதா வலியுறுத்தியுள்ளார்.