இன்று சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. முன்பு ‘‘மெட்ராஸ்’’ என ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1639–ம் ஆண்டு ஆகஸ்ட் 22–ந் திகதி இங்கிலாந்தின் கிழக்கு இந்திய கம்பெனியினர், அப்போதைய விஜய நகர பேரரசின் கீழ் இருந்த சந்திரகிரியின் கடைசி மன்னனிடம் இருந்து சிறிய இடத்தை விலைக்கு வாங்கி அதில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டினார்கள். அதுவே பிற்காலத்தில் மெட்ராஸ் நகரமாக பறந்து விரிந்து இன்று சென்னை என அழைக்கப்படுகிறது.
இந்த இடத்தை வெள்ளையர்கள் விலைக்கு வாங்கிய ஆகஸ்ட் 22–ந் திகதி சென்னை தினம் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.
ஒரு காலத்தில் மக்கள் நடமாட்டம், குறைந்தும் வாகன நெரிசல் இன்றியும் காணப்பட்ட சென்னை இன்று மக்கள் வெள்ளத்தில் வாகன பெருக்கம், உயர்ந்த அடுக்குமாடி கட்டிடங்கள், குடியிருப்புகள் என மாறி விட்டது. சென்னையில் வசித்த மூத்த குடிமக்கள் தெரிவித்த சென்னையின் அந்த கால பெருமையை நாம் அடிக்கடி கேள்விப் பட்டிருக்கிறோம்.
அதே போல் இன்றைய தலைமுறை நடிகர்கள் பார்வையில் அன்றைய சென்னை பற்றிய ஒரு பார்வை.
நடிகர் விஷால்:– நான் சிறுவனாக இருக்கும் போது ஹாலிவுட் படங்களை விரும்பி பார்ப்பேன். அப்போது சென்னையின் இதயம் போன்ற அண்ணா சாலையில் அலங்கார் தியேட்டரில் ஹாலிவுட் படம் பார்க்க என் தந்தை அழைத்துச் செல்வார். அங்கு தான் ஏராளமான ஆங்கிலப் படங்கள் பார்த்து இருக்கிறேன்.
அதன் அருகில் மசூதியையொட்டி சைனீஸ் ரெஸ்டாரண்ட் இருந்தது. அங்கு தவறாமல் செல்வேன். வார கடைசியில் பீச், சினிமா, ஓட்டல்கள் என கொண்டாட்டமாக இருக்கும். நான்கு அல்லது ஐந்து குச்சிகளில் பஞ்சு மிட்டாய் வாங்கி சாப்பிட்டு இருக்கிறேன். டான் பாஸ்கோ பள்ளியில் படிக்கும் போது மற்ற பள்ளிகளில் நடக்கும் கேளிக்கை விளையாட்டுகளில் பங்கேற்பேன். ஒருநாள் பெற்றோருடன் கடைக்கு சென்றபோது கூட்டத்தில் காணாமல் போய் விட்டேன். எனது பெற்றோர் பயந்து விட்டனர். நீண்ட தேடுதலுக்கு பின்பு ஒரு இனிப்பு கடைக்கு அருகில் நின்றிருந்த என்னை கண்டு பிடித்தனர்.
அப்போது என் சட்டை பையில் 10 ரூபாய் இருந்தால் போதும் என் தேவை பூர்த்தியாகும். இப்போது அந்த நாட்களை நினைத்து பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.
கார்த்தி :– நான் சிறுவனாக இருக்கும்போது தியாகராய நகர் என்னோடு கலந்து விட்ட ஒன்று. அங்குதான் எங்கள் வீடு உள்ளது. நான் பள்ளியில் இருந்து வந்ததும் கை – கால்களை கழுவி விட்டு ஏதாவது தீனி சாப்பிட்டதும் பாட்டி என்னை வீட்டுக்கு பின்னால் உள்ள ஆஞ்ச நேயர் மற்றும் கிருஷ்ணன் கோவிலுக்கு அழைத்துச் செல்வார். எங்கள் தெருவில் இருக்கும் யார் வீட்டுக்கு சென்றாலும் அங்கிருக்கும் பெரியவர்கள் என்னை சாப்பிடச் சொல்லி உபசரிப்பார்கள்.
கிரிக்கெட் விளையாடுவேன். அந்த மைதானங்கள் என் நினைவில் இருக்கிறது. மெரீனா பீச்சுக்கு சென்றால் அங்கு பீச் புகாரி ஓட்டலில் ஐஸ் கிரீம் விரும்பி சாப்பிடுவேன். சமீபத்தில் கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று அங்கு பூ விற்பவரை சந்தித்தேன். அவருக்கு ரொம்ப வயதாகி விட்டது. என்னை அடையாளம் கண்டு கொண்டார். என்னிடம் பூவுக்கு பணம் வாங்க மறுத்து விட்டார்.
ஆர்யா :– சென்னையைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் எவ்வளவோ சொல்லலாம். மிகப்பெரிய பீச் இருக்கிறது. நிறைய ஆட்டோ நண்பர்கள், சிறந்த தியேட்டர்கள் இவை எல்லாம் என்னுடன் தொடர்புடையவை. பல வகையான உணவு வகைகள் என்றால் எனக்கு விருப்பம். சிறு வயதில் அண்ணா நகரில் இருந்த நினைவுகள் என்றும் மறைக்க முடியாதவை. அங்குதான் வளர்ந்தேன். நான் படித்த கல்லூரி மைதானமும் எனது நினைவுகளில் பசுமையாக உள்ளது. இந்த விளையாட்டு மைதானம்தான் எனது 2–வது வீடு.
சென்னையில் எனக்கு சொந்தமான ஓட்டல்கள் உள்ளன. சாலையோர கடைகளில் சாப்பிடுவது எனக்கு பிடிக்கும். சென்னையின் சூடான இட்லியும் தேங்காய் சட்னியும் விரும்பி சாப்பிடுவேன்.