ஆகஸ்ட் 17 தேர்தலிற்கு பின்னர் இலங்கையில் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வை முன்வைப்பதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இந்து நாளிதழிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
இலங்கைக்கான புதிய அரசமைப்பை உருவாக்க ஒரு வருடம் தேவைப்படும் எனஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் கருதுகின்றனர், நாங்கள் ஆறு மாதத்திற்குள் அது சாத்தியமாகும் என கருதுகின்றோம்,புதிய தேர்தல் முறையே பிரச்சினைக்குரிய விடயமாக உள்ளது,
மேலும் ஜனாதிபதி முறை குறித்தும் பிரச்சினையுள்ளது,பிரஜைகள் குழுவினர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக நீக்கவேண்டும் என வேண்டுகோள்விடுக்கின்றனர்,ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி இதனை எதிர்க்கின்றது,ஆகவே இதனை நாங்கள் முற்றாக ஆய்வு செய்யவேண்டிய நிலையில் உள்ளோம், பாராளுமன்றத்தை எவ்வாறு பலப்படுத்தலாம் என்பது குறித்து ஆராயவேண்டும்,மாகாணசபைகள் குறித்தும் நாங்கள் ஆராயவேண்டும் அவை எவ்வாறு செயற்படுகின்றன எனவும் பார்க்கவேண்டும், இவையே எங்கள் முன் உள்ளவிவகாரங்கள்.
பல நிர்வாக தடைகள் உள்ளன அவற்றை நீக்கவேண்டும், சில மாகாணசபைகள் மத்திய மற்றும் மாகாணசபைகள் கூட்டாக நடைமுறைப்படுத்தும் அதிகாரங்களில் சிலவற்றை கோருகின்றன,இவையே முக்கிய விடயங்கள் இவை குறித்து கவனம் செலுத்த வேண்டும்,இரு முக்கிய தேசிய கட்சிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் யோசனைகளை முன்வைப்பதில் பிரதமானவையாக காணப்படும்.
வடக்குகிழக்கை பொறுத்த வரை அனேக மக்கள் காணிவிவகாரம் குறித்து திருப்தியடைந்துள்ளனர்,தங்கள் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீள் குடியேற்றுவதே முக்கிய விவகாரம், தேசிய பாதுகாப்பு விவகாரம் தொடர்பான முக்கிய விவகாரங்களை அடிப்படையாக வைத்தே மீள்குடியேற்றம் இடம்பெறும்,படையினர் இது குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.
பொலிஸ் அதிகாரங்களை பொறுத்தவரை பொலிஸ் துறை அரசியல்மயப்படுத்தப்பட்டமை குறித்து ஆராய்ந்துவருகின்றோம், இது மீண்டும் இடம்பெற அனுமதிக்க கூடாது,இதனால் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவை பலப்படுத்தவேண்டும்,இதன் பின்னர் மாகாணசபைகள் என்ன பங்களிப்பை ஆற்றலாம் என்பது குறித்து பார்க்கவேண்டும்,
சட்டமொழுங்கு விடயங்களில் மாகாணசபைகளிற்கு அதிகாரம் காணப்படவேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், இதில் பின்வாங்தல் இல்லை
மனித உரிமை மீறல்கள் குறித்து உள்நாட்டு விசாரணையே இடம்பெற வேண்டும் என நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம், ரோம்பிரகடனத்தில் நாங்கள் கைச்சாத்திடாததே இதற்கு காரணம்,
ராஜபக்ச நிர்வாகம் 2009 இல் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வழங்கிய உத்தரவாதத்தை பல வழிகளில் அர்த்தப்படுத்தலாம், ஓரு கட்டத்தில் அவர்கள் சர்வதேச விசாரணையை நோக்கி முன்னேறினார்,
எனினும் நாங்கள் ஐக்கிய தேசிய கட்சி எப்போதும் இலங்கைக்குள் சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நீதிஅடிப்படை இல்லை என்பதை தெரிவித்து வந்துள்ளோம்,
நீதித்துறையில் நம்பிக்கை இழந்ததன் காரணமாகவே பலர் சர்வதேச விசாரணையை கோரினர்.வடக்கிலும் தெற்கிலும் முன்னர் இந்த பிரச்சினைகள் காணப்பட்டன,
நாங்கள் எங்கள் அரசியல் அமைப்பிற்கு உட்பட்ட உள்நாட்டு பொறிமுறையொன்றை முன்வைக்கமுயல்வோம்,அதேவேளை அது இலங்கையின் சகல சமூகங்களிற்கும், சர்வதேச சமூகத்தினரிற்கும் ஏற்புடையதாக காணப்படும்.
சர்வதேச உறவுகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பின்பற்றிய அணுகுமுறை குறித்து பலர் அதிருப்தியடைந்துள்ளனர்,அது ஓரு தவறு என்றே நான் கருதுகிறேன்,மேற்குலகத்துடனும், இந்தியாவுடனும் எங்களிற்கு இருந்த நெருக்கமான உறவுகளை மீண்டும் ஏற்படுத்துவது, அதேவேளை சீனாவுடன் நல்லுறவை பேணுவதே எங்கள் அணுகுமுறையாக காணப்படும்,