76 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் போராட்டம் முன்னெடுக்கபட்டது.
கல்முனை நகரப் பகுதியில் நேற்று(04.02.2024) நடைபெற்ற குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் உட்பட தமிழ் தேசிய மக்கள் முன்னணி இளைஞர் தலைவர் துசானந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது பிச்சை எடுத்தாவது சுதந்திர தினத்தை கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளது .எனினும் வடக்குக் கிழக்கெங்கும் கரி நாளாக அனுஷ்டிப்போம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினம்
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது,
“பிச்சை எடுத்தாவது சுதந்திர தினத்தை கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளது.எனினும் தமிழ் தேசத்தை பொறுத்தவரை இது ஒரு கரிநாளாகும்.
எமக்கு சுதந்திரமோ அல்லது விடுதலை மற்றும் உரிமைகள் கிடைக்கப்பெறாமையை உறுதிப்படுத்துவதற்காக வடகிழக்கில் தமிழ் மக்களும் பொது அமைப்புகளும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும் தமிழ் தேசிய முன்னணியினராகிய நாங்களும் அணி திரண்டு எதிர்ப்பினை பதிவு செய்ய இருக்கின்றோம்.
எனவே சுதந்திர தின நாளை பகிஷ்கரித்து தமிழ் மக்கள் இலங்கை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் சொல்வதற்கு அந்நாளை பயன்படுத்துவோம்” என தெரிவித்துள்ளார்.