பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்று வரும் மாணவர் ஒருவரை அதே பாடசாலையில் கணித பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில், மாணவனின் பெற்றோர் வங்காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
மன்னார் வங்காலை கிராமத்தில் அமைந்துள்ள பாடசாலையில் தரம் 10இல் கல்வி கற்று வரும் மாணவர் ஒருவர் குறித்த பாடசாலையில் உள்ள வகுப்பறை ஒன்றிற்கு சென்றுள்ளார்.
ஆசிரியர்களின் மோசமான செயல்
இந்நிலையில், இரண்டு மாணவ தலைவர்கள் இந்த மாணவனுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு கன்னத்தில் தாக்கி அந்த மாணவனை குறித்த கணித பாட ஆசிரியரிடம் இழுத்துச் சென்று எதிர்த்து கதைப்பதாக கூறியுள்ளனர்.
அதனையடுத்து, கணித பாட ஆசிரியர் தாக்கப்பட்ட மாணவனிடம் எந்த வித கேள்வியும் இன்றி இரண்டு கன்னங்களிலும் தனது கையால் கண் மூடித்தனமாக தாக்கியுள்ளார்.
இதன்போது, அந்த மாணவன் கீழே விழுந்த போதிலும் மாணவனை மீண்டும் எழுந்து நிற்க வைத்து இரு கையையும் பின் புறமாக வைத்து மீண்டும் இரண்டு கன்னங்களிலும் தாக்கியுள்ளார்.
பின்னர், மாணவர்களை மைதானத்திற்கு வருமாறு அறிவித்த நிலையில் தாக்கப்பட்ட மாணவன் தாமதித்து வந்ததாக மைதானத்தில் நின்ற ஆசிரியர் ஒருவரும் அதே கன்னத்தில் தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
அதனையடுத்து, வீட்டிற்கு சென்ற மாணவன் திடீர் சுகயீனமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
அதற்கமைய, மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் கடுமையான தாக்குதலின் காரணமாக மாணவனின் ஒரு காதின் கேட்கும் திறன் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை, இந்த மாணவனை தாக்கிய கணித பாட ஆசிரியர் கைது செய்யப்படவில்லை எனவும் குறித்த ஆசிரியரை காப்பாற்றும் முயற்சியில் பாடசாலை நிர்வாகம் செயற்படுவதாக மாணவனின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த மாணவனை பரிசோதித்த சட்ட வைத்திய அதிகாரி மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக குறிப்பி்ட்டுள்ளார்.