வயோதிபப் பெண் ஒருவரின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வவுனியா பொலிஸார் பிரதேச மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கையினை பொலிஸார் நேற்று (05.03.2024) விடுத்துள்ளனர்.
வவுனியா வைத்தியசாலையில் கடந்த நவம்பர் மாதம் 07 ஆம் திகதி புள்ளி நிறச் சட்டையுடன் வயோதிபப் பெண் ஒருவர் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த வயோதிப பெண்
அவருக்கான சிகிச்சைகள் வவுனியா வைத்தியசாலையில் இடம்பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் (04) குறித்த வயோதிபப் பெண் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
சுமார் 5 அடி உயரமுடைய உயிரிழந்த வயோதிப பெண் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் பெண்ணின் சடலம் வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் தொடர்பாக தகவல் தெரிந்தோர் அல்லது உறவினர்கள் வவுனியா வைத்தியசாலையை அல்லது வவுனியா பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.