கிளி., முல்லை. மாவட்டங்களில் படையினர் வசமிருந்த காணிகள் ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிப்பு!

622

 

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் போருக்குப் பின்னர் கடந்த 6 வருடங்களாக படையினர் தமது பயன்பாட்டுக்காக எடுத்துக் கொண்டிருந்த 615 ஏக்கர் நிலம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் காணி உரிமையாளர்களிடமே மீள கையளிக்கப்பட்டிருக்கின்றது

இன்றைய தினம் தேசிய உணவு உற்பத்தி ஊக்குவிப்பு செயற்றிட்டத்தின் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த காணிகளை மக்களிடம் கையளித்துள்ளார்.

இதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் 476 ஏக்கர் நிலமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 139 ஏக்கர் நிலமுமாக மொத்தமாக 615 ஏக்கர் நிலம் இன்றைய தினம் மக்களிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

போர் காலத்தில் படையினரின் பயன்பாட்டுக்காக எடுக்கப்பட்டிருந்த மக்களுடைய நிலங்கள், இன்றைய தினம் மக்களிடம் மீளவும் கையளிக்கப்படுகின்றது. இந்த செயற்றிட்டத்தை நாங்கள் தொடர்ந்தும் முன்னெடுப்போம்.

இதன்படி மக்களுடைய நிலங்களை மீண்டும் மக்களிடமே வழங்குவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் நிச்சயமாக எடுப்போம். என அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இதேவேளை கிளிநொச்சி நகர் பகுதியில் படையினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த பரவிப்பாஞ்சான் பகுதியிலிருந்த 39 வீடுகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் உள்ளடங்கியிருக்கின்றது.

குறித்த காணியை விடுவிக்கக்கோரி கடந்த காலத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு பகுதியில் மீள்குடியேற்ற கோரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுவிக்கப்பட்ட பகுதிக்குள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

இந்தப் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 1400 க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பகுதி படையினர் கட்டுப்பாட்டின் கீழ் தொடர்ந்தும் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், குறித்த நிலத்திற்குச் சொந்தமான மக்கள் மாதிரி கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE