இது தொடர்பாக அமைச்சர் திகாம்பரம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மத்திய மாகாணசபை உறுப்பினரும் மத்திய மாகாண கல்வியமைச்சின் கண்காணிப்பு உறுப்பினருமான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
கடந்த 5 ஆம் திகதி பெய்த அடை மழை காரணமாக 110 வருட பழைமை வாய்ந்த ஊட்டுவில் பாடசாலையில் கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்துள்ளது. மேலும் இந்தப்பாடசாலையின் கட்டிடத்தின் ஏனைய பகுதிகளும் இடிந்து விழும் அபாயத்தினை எதிர் நோக்கியுள்ளதால் தரம் ஒன்று தொடக்கம் தரம் 5 வரை வகுப்புக்களைச் சேர்ந்த 100 மாணவர்களை மாற்றிடமொன்றில் கல்வி நடவடிக்கைகளைத் தொடர வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் திகாம்பரத்தின் பணிப்புரைக்கேற்ப நிலைமையை அவதானிப்பதற்காக மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய சங்கத்தின் உபதலைவர் சிவானந்தன், நுவரெலியா பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் கல்யாணகுமார், உட்பட பலர் 6 ஆம் திகதி ஊட்டுவில் தோட்டத்திற்கு விஜயம் செய்தனர்.
இதன் போது நிலைமையை அவதானித்த மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் ஊட்டுவில் பாடசாலைக்கு புதிய கட்டிடமொன்று தேவை என்பது குறித்து மத்திய மாகாண முதலமைச்சர் சரத்ஏக்கநாயக்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதன் பயனாக, 7 மில்லியன் ரூபா செலவில் புதிய கட்டிடமொன்றினை அடுத்த வருடம் ஆரம்பித்தில் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக முதலமைச்சர் உத்தரவாதம்
வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் புதிய கட்டிடம் ஒன்று அமைக்கப்படும் வரை ஊட்டுவில் பாடசாலை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு தோட்டத்திலுள்ள பிறிதொரு கட்டிடமொன்றினைப் பெற்றுத்தருமாறு கோல்புறுக் கோட்ட கல்விப்பணிப்பாளர் வி.ஜெயராம் வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் ஊட்டுவில் தோட்ட முகாமையாளருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இதன் போது மேலதிகாரிகளின் உத்தரவின்றி உரிய கட்டிடத்தினை வழங்க முடியாதென்று தோட்ட முகாமையாளர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் திகாம்பரத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டமையைத் தொடர்ந்து அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனியின் உயரதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உரிய கட்டிடத்தினைப் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர்
திகாம்பரம் தன்னிடம் தெரிவித்துள்ளதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் மேலும் தெரிவித்தார்.