சர்வதேச சமூகத்தின் ஊடாக புலிகள் சரணடைய எத்தனித்தனர் – கோதபாய

366
சர்வதேச சமூகத்தின் ஊடாக  புலிகள் சரணடைய எத்தனித்தனர் – கோதபாய: தமிழில் : குளோபல் தமிழ்ச் செய்திகள்:-

சர்வதேச சமூகத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைய எத்தனித்தனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சரணடைதல் விவகாரம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் எவ்வித நேரடி இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைந்த போது, கொலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பிரதானமாக குற்றம் சுமத்தப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இலங்கைக்கான நோர்வே தூதுவராக கடமையாற்றிய டோர் ஹாட்ரெமிடம் (வுழசந ர்யவவசநஅ) இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2007ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையில் ஹாட்ரெம் இலங்கைக்கான நோர்வே தூதுவராக கடமையாற்றியிருந்தார்.

2009ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி ஹாட்ரெம், பௌத்தலோக்க மாவத்தையில் அமைந்துள்ள தமது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வந்ததாகவும், புலிகள் சரணடைய விரும்புவதாக கூறியதாகவும் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

“தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் தம்மைத் தொடர்பு கொண்டு, சரணடைய விரும்புவதாக கூறினார்” என ஹாட்ரெம் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

புலித்தேவனும் சில உறுப்பினர்களும் அவர்களது குடும்பங்களும் சரணடைய விரும்புவதாக புலித்தேவன் கூறினார் என்ற தகவலை ஹட்ரெம் என்னிடம் பரிமாறிக்கொண்டார் என கோதபாய குறிப்பிட்டுள்ளார்.

புலித்தேவனுடன், ஹாட்ரெம் தொiலாபேசி ஊடாக தொடர்புகளைப் பேணி வந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், சரணடைவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்க முடியவில்லை. யார் சரணடைய விரும்புகின்றார்கள் என்பது பற்றிய ஆள் அடையாள விபரங்களை புலித்தேவனைத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள ஹாட்ரெமினால் முடியாமல் போய்விட்டது என கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஏதேனும் ஓர் நீதிமன்றப் பொறிமுறைமை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டால் அதன் முதன்மை நோக்கம் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் சரியான முறையில் விசாரணை செய்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆள் அடையாளத்தை உறுதி செய்து சரணடையச் செய்ய வேண்டும் என்பது தம்முடைய தீர்மானம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலித்தேவனை தொடர்பு கொள்ள முடியவில்லை என ஹட்ரெம் குறுஞ் செய்தியொன்றை தமக்கு அனுப்பி வைத்திருந்தார் எனவும், இதனால் சரணடையும் முயற்சி தோல்வியடைந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில மணித்தியாலங்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக இறுதி முயற்சியை மேற்கொண்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைவதாகக் கூறி எம்மீது இறுதித் தாக்குதல் ஒன்றை நடாத்த திட்டமிட்டிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியமான உறுப்பினர்கள் சரணடைய முயற்சித்த விவகாரம் தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அப்போதைய இலங்கைக் கிளைத் தலைவர் போல் கெஸ்டெல்லாவிடமும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

சரணடைவதற்காக, முன்னரங்கப் பகுதிகளின் பாதுகாப்பு கட்டமைப்புக்களை தளர்த்துவோம் என தமிழீழ விடுதலைப் புலிகள் கருதியதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இலங்கைத் தூதரகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட கேபிள் தகல்வல்களின் அடிப்படையில் விக்கிலீக்ஸ_ம் இந்த விடயம் பற்றிய தகவல்களை வெளியிட்டிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலிகள் சரணடைவது தொடர்பில் இலங்கையுடன் தொடர்புகளைப் பேணிய வெளிநாட்டு தரப்புக்கள் பற்றிய அனைத்து விபரங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் ஹாட்ரெமிடம் விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை யுத்தம் தொடர்பிலான பல்வேறு தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது எனவும், விக்கிலீக்ஸ் தகவல்களை விசாரணை செய்யும் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா என்பது கேள்விக்குறியே என அவர் தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ம் திகதி, ஹாட்ரெம், பெசில் ராஜபக்ஸவிற்கு குறிப்பு ஒன்றை அனுப்பி வைத்திருந்தார் எனவும், அதில் வன்னி கிழக்கு களமுனையில் பொதுமக்கள் சிக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை விடுவிக்காது தடுத்து வைத்திருப்பதாகவும் ஹாட்ரெம், பெசிலுக்கு அறிவித்திருந்தார் என தெரிவித்துள்ளார்.

புலிகள், சிக்கியுள்ள பொதுமக்களை தற்போதைக்கு விடுவிப்பார்கள் என்ற நம்பிக்கையில்லை எனவும் அது வருத்தமளிப்பதாகவும் ஹாட்ரெம் கையொப்பமிட்டு பெசிலுக்கு அனுப்பிய குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களை புலிகள் பணயமாக வைத்திருந்த போது யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி அரசாங்கத்துடன் தொடர்புகளைப் பேணிய சர்வதேச சமூகத்தின் எவரும், பொதுமக்களை விடுவிப்பதற்காக குரல் கொடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பொதுமக்களை விடுதலை செய்யுமாறு தமிழீழ விடுதலைப் புலிகளிடம் எந்தவொரு சர்வதேச தரப்பும் கோரவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில், யுத்த காலத்தில் இலங்கையில் கடமையாற்றிய ஐக்கிய நாடுகள் அமைப்பு அதிகாரிகள் சாட்சியமளிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களை விடுதலை செய்ய முயற்சித்த தமிழ் பேசும் ஐக்கிய நாடுகள் உத்தியோகத்தர்களை புலிகள் சிறைபிடித்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐ.நா பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை யுத்த வலயத்திலிருந்து மீட்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் முயற்சியை புலிகள் முறியடித்திருந்தர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டவர்களை அழைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும எனவும், ஆள் அடையாளத்தை மூடி மறைத்து விசாரணை நடத்தப்படக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது தாம் ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்பதனால், அச்சுறுத்தல் என்ற காரணியை முன்வைத்து தப்பித்துக்கொள்ளாது, குற்றம் சுமத்துபவர்கள் யார் என்பதனை தெரியப்படுத்த வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

புலம்பெயர் தமிழர்கள் குற்றச்சாட்டுக்களை நேரடியாக சுமத்தி அவற்றை முடிந்தால் நிரூபிக்கட்டும் என அவர் சவால் விடுத்துள்ளார்.

அரசாங்கத்திற்கு சார்பான எந்தவொரு விடயங்களையும் ஐக்கிய நாடுகள் விசாரணை அறிக்கை கவனத்திற் கொள்ளவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

சரணடைந்த விடுதலைப் புலிகளை கொலை செய்யவில்லை என யுத்த காலத்தில் கடமையாற்றிய அமெரிக்கத் தூதுரக பாதுகாப்பு அதிகாரி லெப்டினன் கேணல் லோரன்ஸ் ஸ்மித் வெளியிட்ட அறிக்கை கண்டுகொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்ட வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைய முயற்சிக்கவில்லை என லோரன்ஸ் கூறியிருந்தார் எனவும், 2011ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கையோ அல்லது தீர்மானமோ லோரன்ஸின் கருத்துக்கள் பற்றி கவனம் செலுத்த தயாரில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமாதான முயற்சிகள் தோல்வியடைந்ததனைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய புள்ளி விபரங்கள் தொடாபில் ஒவ்வொரு தரப்பினரும் ஒவ்வொரு விதமான எண்ணிக்கை விபரங்களை வெளியிட்டிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய பாராளுமன்றில் பொதுமக்களும், போராளிகளுமாக 100,000 பேர் உயிரிழந்தாகவும், செனல்4 மற்றும் தாருஸ்மான் அறிக்கையில் 40000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், சர்வதேச மன்னிப்புச் சபை 10,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், ஐக்கிய நாடுகள் அமைப்பினால் அனுப்பி வைக்கப்பட்ட இரகசிய ஆவணமொன்றில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 7700 என குறிப்பிட்டிருந்தது எனவும் இவ்வாறு மாறுப்பட்ட உயிர் இழப்பு விபரங்களே வெளியிடப்பட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டுமென கருதியிருக்காவிட்டால் படையினர் துரித கதியில் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்திருப்பர் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான்காம் கட்ட ஈழப்போரில் 6000 உத்தியோகத்தர்களும் படையினரும் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்கால விசாரணைகளின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிரிழப்பு விபரங்களை உறுதி செய்து கொள்ள முடியும் என நம்புவதாக கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கை மற்றும் தீர்மானம் தொடர்பிலான நம்பகத்தன்மை தமக்குக் கிடையாது என கோதபாய ராஜபக்ஸ கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு யுத்தக் குற்றச் செயல் விசாரணை தொடர்பில் அளித்த பிரத்தியேக செவ்வியில் தெரிவித்துள்ளார்.

SHARE