இந்தியாவின் இளம் வர்த்தகப் பிரதிநிதிகள் 44 பேர் அடங்கிய குழு ஒன்று நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தது. யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் யாழ். வர்த்தகப் பிரதிநிதிகளுக்கும் இவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள வர்த்தகர்கள் இலங்கையில் குறிப்பாக நடுத்தர சிறிய வர்த்தக தொழில் முயற்சிகளையும் கைத்தொழில் முயற்சிகளையும் ஆரம்பித்தல் சம்பந்தமாக கலந்துரையாடியுள்ளார்கள். யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தில் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின் ஒழுங்குபடுத்தலை இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன் மேற்கொண்டார். இந்த நிகழ்வில் வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கைத்தொழில் அமைச்சர் பொ.டெனீஸ்வரன், யாழ். வர்த்தக சமூகத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.