தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது. இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள 14 சிறைச்சாலைகளில் உள்ள சுமார் 200 தமிழ் கைதிகள் இவ்வாறு தமது விடுலையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
விடுதலையுமின்றி விசாரணையுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்குமாறு கைதிகள் வலியுறுத்தி உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
நேற்றைய தினம் கொழும்பு கோட்டை முன்பாக நடைபெற்ற கைதிகளின் போராட்டத்தில் அவர்களது உறவுகள் கண்ணீர் மல்க விடுதலையை வலியுறுத்தி குரல் எழுப்பியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் இன்று போராட்டம் நடைபெற்றது. நிபந்தனையின்றி கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இதேவேளை தமிழ் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் கிளிநொச்சியில் நேற்று மத வழிபாடுகள் இடம்பெற்றன.
அத்துடன் நாளை வெள்ளிக்கிழமை வவுனியாவில் தமிழ் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளை யாழ் முனியப்பர் கோவில் முன்பாக அடையாள போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதேவேளை தமது விடுதலையை வலியுறுத்தி மத தலைவர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் சமூக செயற்பாட்டு நிறுவனங்கள் என்பன போராட்டங்களை நடத்துமாறு தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் இலங்கை அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை நீதியமைச்சரின் அரசியல் கைதிகள் என்று எவருமில்லை என்ற கருத்து வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ள சம்பந்தன் கைதிகள் விடுதலை தொடர்பில் அரசுடன் பேசவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.
இந்த வார இறுதிக்குள் தமிழ் கைதிகளின் விவகாரத்தில் அரசு முடிவு வழங்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்போவதாக பிரதான எதிர்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
குண்டு வைத்தவர்களே கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச அரசியல் கைதிகள் என்று எவருமில்லை என்று மீண்டும் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் எதிர்வரும் 20ஆம்திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சரவையில் உயர்மட்டக் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகத்திற்கு விரோதமான, இயற்கைக்கு முரணான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை அரசு விடுவிக்க வேண்டும் எனக் கூறியுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நல்லிணக்கம் என்ற சொற்பதத்தை பயன்படுத்தி சர்வதேசத்தை ஏமாற்றும் அரசு அதை செயலில் காட்டவேண்டும் என்றும் கூறினார்.
உண்ணா விரத்தில் ஈடுபடும் கைதிகளுக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வட மாகாண சபை கடிதம் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியுள்ளதாக வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்