யாழில் களவில் ஈடுபட்ட இராணுவத்தினர் கைது

287

யாழ்.சாவகச்சேரி பகுதியில் களவில் ஈடுபட்ட இராணுவத்தினர் சாவகச்சேரி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இராணுவத்தினரை விடுவிக்குமாறு இராணுவ தரப்பினால் கடும் அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், தெரியவருகின்றது.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது ,

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவற்குழி பிரதேசத்தில் கண்டி வீதியின் இரு மருங்கிலும் விளம்பர பதாகைகள் நடப்பட்டுள்ளன.

அவற்றின் இரும்பு குழாய்களை அண்மை நாட்களாக இரவு வேளைகளில் வெட்டி களவாடப்பட்டு வந்தன.

அது குறித்து விளம்பர பதாகைகளுக்கு உரிய நிறுவனங்கள் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டுகளை பதிவு செய்திருந்தனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துடன் நேற்றைய தினம் இரவு அப் பகுதியில் விசேட பொலிஸ் குழு ஒன்று பதுங்கி இருந்துள்ளது.

நள்ளிரவை அண்டிய வேளை அப்பகுதிக்கு வந்த 7 பேர் கொண்ட குழுவினர் விளம்பர பதாகைகளின் இரும்பு குழாய்களை அறுக்க தொடங்கினர்.

அதையடுத்து பதுங்கி இருந்த பொலிஸ் குழுவினர் அந்த குழுவை மடக்கி பிடித்து பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது தாம் கோப்பாய் இராணுவ முகாமை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கோப்பாய் இராணுவ முகாம் பொறுப்பதிகாரிக்கு அது குறித்து தெரியப்படுத்தினர்.

அதனை அடுத்து பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த கோப்பாய் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்ட இராணுவத்தினரை விடுவிக்குமாறு கோரியுள்ளார்.
அதற்கு பொலிஸ் பொறுப்பதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளார்.

தற்போது இராணுவ தலமையகத்தினால் கைது செய்யப்பட்ட இராணுவ வீரர்களை விடுவிக்குமாறு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு தொலை பேசி ஊடாக தொடர் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது.

SHARE