பாலியல் தொல்லை – இந்திய தூதரகமும், செஞ்சிலுவை சங்கமும் இணைந்து முன்னெடுத்த விசாரணைகள் முடிவடைந்தன

289

இந்திய வீடமைப்பு திட்டத்துடன் தொடர்புபட்டிருந்த இலங்கை செஞ்சிலுவை சங்க அதிகாரிகள் சிலர்  அதற்கான நிதியுதவிகளை வழங்குவதற்காக பெண்களிடம் பாலியல்சலுகைகளை கோரியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை பூர்த்தியாகியுள்ளன.

இந்திய தூதரகமும், செஞ்சிலுவை சங்கமும் இணைந்து முன்னெடுத்த இந்த விசாரணைகள் முடிவடைந்துவிட்டன,விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பற்றி ஆராய்வதற்காக நாளை உயர்மட்ட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது,அதன்போது செஞ்சிலுவை சங்கத்தின் நிர்வாகிகள் தீர்மானமொன்றை எடுப்பார்கள், அதன்பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க முடியும் என இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தொடர்பாடல்கள் மற்றும் மனிதாபிமான இராஜதந்திரத்திற்கான மூத்த முகாமையாளர் மகியாஸ் ஜொனே தெரிவித்துள்ளார்.

மேலும் குற்றச்சாட்டுகளிற்கு உள்ளான தொழில்நுட்ப உத்தியோகத்தர் தொடர்ந்தும் செஞ்சிலுவை சங்கத்தின் கிளிநொச்சிகிளையில் பணியாற்றுகின்றார் என அங்கிருந்து தகவல்கள் வெளியாகின்ற போதிலும் அவர் சுயவிடுப்பில் சென்றுவிட்டதாக மகியாஸ் ஜொனே தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பில் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து செஞ்சிலுவைசங்கத்திற்கு தான் பலமுறை எழுதியுள்ளதாக கிளிநொச்சியை சேர்ந்த கிறிஸ்தவ மதகுரு அருட்தந்தை எஸ்எம் பி ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

வீடமைப்பு திட்டத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளிற்கான நிதியை வழங்குவதை கிளிநொச்சி அதிகாரிகள் வேண்டுமென்றே தாமததப்படுத்துவதாக தனக்கு தெரியவந்தவுடன் இது குறித்து தான் செஞ்சிலுவை சங்கத்திற்கு எழுதியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய வீடமைப்புதிட்டம் ஓவ்வொரு வீட்டிற்கும் 800.000ருபாயை ஓதுக்கியிருந்தபோதிலும் இந்த நிதியை வழங்கும் செஞ்சிலுவைசங்கம் அதனை 500,000 என மட்டுப்படுத்தியிருந்தது,இந்த பணத்தை வைத்துக்கொண்டு வீடுகளை கட்டுவதென்பது மிகவும் கடினமான விடயம்,கட்டுமான பொருட்களின் விலைகள் அதிகரித்துவிட்டன என அருட்தந்தை எஸ்எம் பி ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் வீடமைப்புதிட்டத்திற்கு தெரிவுசெய்யப்பட்டவர்கள் கட்டுமானப்பொருட்களை குறிப்பிட்ட ஓரு கடையிலேயே கொள்வனவு செய்யுமாறு செஞ்;சிலுவை சங்க அதிகாரிகள் வற்புறுத்திவருவதாகவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE