விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறைப்பொறுப்பாளர் தமிழினியின் மறைவு குறித்து நாடுகடத்தப்பட்டுள்ள சிங்கள ஊடகவியலாளர் மஞ்சுள வெடிவர்த்தனவின் எழுதியுள்ள அஞ்சலிக் கட்டுரை கொழும்பு நியூஸ்டுடே இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
குறித்த அஞ்சலிக்கட்டுரையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழினி ஒருபோதும் சிங்கள மக்கள் தொடர்பில் குரோத மனப்பான்மையுடன் இருக்கவில்லை. நாங்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதே அவரின் நிலைப்பாடாக இருந்தது.
தமது இனத்தின் விடுதலைக்காக அவர் தன்னை அர்ப்பணித்திருந்தார். அதே நேரம் பெண்களுக்கான உரிமைகள் தொடர்பில் அவர் எதுவித விட்டுக் கொடுப்புகளுக்கும் தயார் இல்லை என்பதையும் உணர்த்தியிருந்தார்.
விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற வகையில் அவர் கைது செய்யப்பட்டதே தவறானது. எனினும் அதன் பின்னர் நடைபெற்ற சட்ட இழுத்தடிப்புகள் மற்றும் தடுத்துவைப்பின் கொடூரங்கள் காரணமாக அவர் மனதளவில் பாதிக்கப்பட்டார். அதன் காரணமாகவே மரணம் அவரை சீக்கிரமாக அழைத்துக் கொண்டுவிட்டது.
தென்னிலங்கையில் அடக்கி வைக்கப்பட்டுள்ள சிங்களப் பெண்கள் குறித்தும் தமிழினியிடம் விசாலமான பார்வை இருந்தது. சுருக்கமாகச் சொல்வதானால் சிங்களப் பெண்களின் மனச்சாட்சிக்கான தமிழ்க்குரலாக அவரை அடையாளப்படுத்தலாம்.
தமிழினியின் மறைவு எங்கள் சகோதரியின் மறைவாகவே எங்களால் உணரப்படுகின்றது என்றும் மஞ்சுள வெடிவர்த்தன தனது இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.