சாவு சொல்கிற யதார்த்தம்…

307

சாவு சொல்கிற யதார்த்தம்…

வாழ்வில் சாவா?, சாவில் வாழ்வா? சாவிலும் வாழ்வா?‍‍-என‌
போட்டிபோடுகிற சாவோடு ஒரு பேட்டி..

நான் சொன்னேன்…
நான் செத்துப்போனால், வரலாற்றில் திருப்புமுனையாகலாம்..
உலகம் பேசிக்கொள்ளும்‍_ நிமிர்ந்ததென் நெஞ்சு
வாழ்ந்திருந்தால் செய்ய முடியாததை சாவு செய்துவிடும்..

சாவு சொன்னது,
அப்படி இருக்கவேண்டிய கட்டாயம் ஏதுமில்லை

ஓம்…ஓம்..
அரசியலிலாவது ஏதாவது நிகழுமே..!

அவ்வாறு நடப்பதற்கும் அவசியமில்லை…

அதுவும் சரிதான்…
வரலாறாய் இல்லாட்டிலும் வரலாற்றிலாவது ஏதாவது எழுதப்படுமே..!!

அது வரலாறு யாரால் எழுதப்படுகிறது என்பதில் தங்கியுள்ளதால்‍_
அதுவும் நிச்சயமில்லை..

அப்படி என்றால், ஆகக்குறைந்தது..
ஒட்டுமொத்தவரலாறு ஒன்று என்னையும் சேர்த்து
புள்ளிவிபரம் வெளியிடுமே!

அதுவும் நீசெத்துப்போனாயென உறுதியானால் தானே…!
அல்லது உறுதிப்படுத்தும் மட்டும்
எலும்புக்கூடு உக்காமல் கிடந்தால் தானே…!!

அப்போ ஊர்கூடி அழுதுவிடும் ஒப்போடு மட்டுமே
என்சாவு முடியுமோ…?

அதுவும் உனதூரில் அது முதலாவதென்றால் மட்டுமே,
அத்தோடு, உனது வாழ்வுபற்றிய உனதூரின் புரிதலிலும் அது தங்கியுள்ளது…

அப்போ எங்கண்டை சாவென்ன இவ்வளவு இழக்காரமாய் போனதோ??
யார்சொன்னது அப்படி?
மலிவான தொழிலென்றால் இவ்வளவு அக்கறையோடை
யார்செய்வினம்…

உங்களில் பாதிப்பேர் செத்துப்போனாலும்‍_அப்போதும் கூட‌..
சாவு பெறுமதியாகவே இருக்கும்
எப்போதும் சாவுபற்றி சிந்திக்கிற மாதிரி சிந்திக்காதவரைக்கும்.

SHARE