மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த பிரித்தானியாவின் செனல்4 ஊடகவியலாளர் கலம் மக்ரேயின் இலங்கை குறித்த ஆவணப்படம் மெய்யானதே என மெக்ஸ்வல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஒரு பொதுமகன் கூட உயிரிழக்கவில்லை எனவும், செனல்4 ஊடகத்தின் ஆவணப்படம் பொய்யானது எனவும் மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செனல்4 ஊடகத்தின் ஆவணப்படத்தில் சில விடங்கள் நாடகப் பாங்காக அமைந்திருந்தாகவும், மிகைப்படுத்தப்பட்ட மொழிப் பிரயோகங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, விசாரணை நடாத்துவதற்கு போதியளவு விடயங்கள் ஆவணப்படத்தில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதவான் ஒருவரின் ஊடாக விசாரணை நடத்த போதுமானளவு விடயங்கள் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சரணடைந்த போது கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை அப்போதைய அரசாங்கம் நிராகரித்து வந்த போதிலும் அது குறித்தும் சுயாதீன நீதிமன்றம் ஒன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென பரிந்துரை செய்துள்ளது.
வெள்ளைக்கொடி ஏந்தி வந்த புலி உறுப்பினர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் எஸ்.புலித்தேவன், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன் ஆகியோர் சரணடையச் சென்ற போது கொலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் முரண்பட்ட சாட்சியங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குற்றச்சாட்டு தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.
யுத்த வலயத்தில் பஸ்களில் இராணுவத்தினால் ஏற்றிச் செல்லப்பட்ட பொதுமக்களை காணவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் இது குறித்தும் தனியான விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் இராணுவத்தினர் விசாரணை நடத்துவது பொருத்தமாகாது எனவும் சுயாதீன நீதவான்களின் பங்களிப்புடன் நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.