இந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சென்னையில் காலணியால் தாக்கப்பட்டு உள்ளார்..
இலங்கை அகதிகள் தொடர்பான கருத்தரங்கின் முடிவில், பார்வையாளர்களில் ஒருவர் தனது காலணியை கையில் எடுத்து தாக்கியுள்ளார்.
சென்னையிலிருந்து வெளியாகும் “தெ ஹிந்து” நாளிதழ் குழுமத்தின் ஆய்வு அமைப்பான, “அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான ஹிந்து மையம்” என்ற அமைப்பினால் ,இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம் குறித்து இன்று சென்னையில் மியுசிக் அக்காடெமியில் கருத்தரங்கு ஒன்று நடந்தது.
அந்த கருத்தரங்கில் கலந்து கொண்டுபேசிய முன்னாள் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகரும், முன்னாள் மேற்கு வங்க ஆளுநருமான, எம்.கே.நாராயணன், பேசி முடித்துவிட்டு, மேடையில் இருந்து இறங்கி அந்த அரங்கை விட்டு வெளியே சென்று கொண்டிருக்கும்போது, அரங்கில் பார்வையாளராக அமர்ந்திருந்த ஒருவர், அவரை அணுகி, செருப்பால் அடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திடீரென நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை அடுத்து உடனடியாக, அவரை, அவரது அருகில் இருந்த ஹிந்து பத்திரிகை குழுமத்தின் தலைவர் என்.ராம் மற்றும் பிறர் சூழ்ந்து பாதுகாப்பாக அங்கிருந்து அவரது வாகனத்திற்கு அழைத்துச் சென்றனர்.
தாக்குதல் நடத்திய நபர், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த பிரபாகரன் என அறியப்பட்டுள்ளார்.
தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்ட அவர், தான் எந்த இயக்கத்தையும் சாராதவர் என்றும், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியை திசை திருப்பியவர் எம்.கே.நாராயணனே என்றும் அதனால் கோபம் அடைந்த தான் அவரைத் தாக்கியதாகவும் அங்கிருந்த செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த நிலையில் அங்கு விரைந்த போலிசார், பிரபாகரனைக் கைது செய்தனர்.