வங்கிகள் மற்றும் நகை கடைகளில் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்வனவு செய்ய செல்லும் பொது மக்களை குறி வைத்து கொள்ளையிடும் கும்பலில் சந்தேகத்திற்குரிய இருவர் 20.11.2015 அன்று மாலை அட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கிகள் மற்றும் நகை கடைகளில் தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தொகைகள் பெற்று வரும் நபர்களிடம் நண்பர்களாக பேசி தங்களது முச்சக்கரவண்டிகளில் ஏற்றிச்செல்லும் வழியில் அவர்களுக்கு இனிப்பு பண்டங்கள் மற்றும் குளிர்பானங்களை கொடுத்து மயக்கமடைய செய்த பின் அவர்களிடமிருக்கும் பணம் மற்றும் நகைகளை கொள்ளையிடும் குழு ஒன்று தொடர்பாக நான்கு முறைபாடுகள் அட்டன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனை அடிப்படையாக வைத்துக்கொண்டு தேடுதலில் இருந்த பொலிஸார் குறித்த சம்பவத்தில் ஈடுப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் நாவலப்பிட்டி பகுதியை சேர்ந்த இருவரையும் அவர்களின் முச்சசக்கரவண்டிகளையும் 20.11.2015 அன்று மாலை அட்டன் பகுதியில் வைத்து கைப்பற்றி கைது செய்துள்ளனர்.
இவர்களின் மீதான பொலிஸ் விசாரணை தொடரப்பட்டு வரும் நிலையில் இலங்கையில் ஏகப்பட்ட பகுதிகளில் இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
பொலிஸார் மேலதிக விசாணைகளின் பின் சந்தேக நபர்கள் இருவரையும் அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பொவதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.