மாவீரர் தினத்தை யாழ்.குடாநாட்டில் விளக்கேற்றி அனுஸ்ட்டித்த சம்பவம் தொடர்பில் சிலர் யாழ். பொலிஸாரினால் அழைக்கப்பட்டு, கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், எச்சரிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அரச திணைக்களத்தினைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளிலும் கடந்த 27 ஆம் திகதி மாவீரர் தினம் அனுஸ்ரிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி போன்ற அரசியல் உட்பட பல தரப்பினரும் மாவீரர் நினைவேந்தலை இம்முறை நடத்தியிருந்தனர்.
இந்நிலையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வுக்காக அன்றைய தினம் அரச திணைக்களம் ஒன்றில் உள்ள ஆலயத்தில் விளக்கேற்றி பணியாளர்கள் வழிபாடு மேற்கொள்ளவுள்ளதாக யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பணிமனைக்கு அத்திணைக்கள உயர் அதிகாரியினால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் மாவீரர் நினைவேந்தல் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அவ் உயர் அதிகாரி அனுப்பிவைத்த கடிதத்தில் கோரப்பட்டுடிருந்தது.
இதுமட்டுமல்லாமல் இந்நிகழ்வுகளை நடத்துபவர்கள் தொடர்பிலும் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்ட பொலிஸார் தமக்கு கிடைத்த தகவலின்படி அத்திணைக்களத்தின் பணியாளர்களை அழைத்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
பணியாளர்களில் சிலருடைய உறவினர்கள் யுத்தத்தின் போது, உயிரிழந்தவர்கள் என்பது பொலிஸார் மேற்கொண்ட விசாணையில் தெரியவந்துள்ளது.
இதன்படி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களுடைய முழுமையான விபரங்களை பொலிஸார் பெற்றுக் கொண்டுள்ளனர்.
விசாரணைகள் முடிவில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு நடத்தியவர்கள் தொடர்பில் எந்த முறைப்பாடுகளையும் பதிவு செய்யாமல் பொலிஸார் அவர்களை விடுவித்துள்ளனர்.
இருப்பினும், குறித்த விசாரணைகள் தொடர்பில் யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்ட போதும் அப்படி ஒரு விசாரணை நடைபெறவே இல்லை என்று மறுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.