வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கட்சித்தலைமைப் பொறுப்பினை ஏற்கலாம். அது அவரது உரிமை

382

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பினை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஏற்கலாம். அது, அவரது உரிமை. அதனைத் தீர்மானிப்பது கட்சியும், மக்களுமே என்று அந்தக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

SAM_05991 vigneshwaran-sambanthan-news

மட்டக்களப்பில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை கட்சி ஆதரவாளர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்டக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது, வடக்கு மாகாண முதலமைச்சருக்கும், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலே காணப்படுகின்ற முரண்பாடுகள் தொடர்பில் கேள்வியொன்று இரா.சம்பந்தனிடம் முன்வைக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “கட்சிக்குள் முரண்பாடு உள்ளது, அதனை மறுப்பதற்கு இல்லை. ஆனால் முரண்பாடுகள் அனைத்தும் கட்சிக்கு வெளியில் செல்லக் கூடாது. அனைத்து விடயங்களும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும். ஜனநாயக கட்சி என்ற ரீதியில் முரண்பாடுகள் காணப்படும், அது ஒருபெரிய விடயமல்ல ஆனால் அவை ஊடகங்களில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

அத்தோடு, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிற்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. அவை பாராளுமன்றத் தேர்தலின் போது வடக்கு மாகாண முதலமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முழுமையாக ஆதரிக்கவில்லை. அவர் தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் ஊடாக இலங்கைத் தமிழரசுக் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். எனவே அந்தக் கட்சியை ஆதரிப்பதற்கு அவருக்கு ஒரு கடமை இருக்கின்றது. ஆனால் அவர் ஆதரிக்கவில்லை, ஆதரிக்காமல் விட்டது மாத்திரமல்ல நான் மௌனியாகப் போகின்றேன், ஊமையாகப் போகின்றேன் என தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டமை வேறொரு கட்சிக்கு ஆதரவளிப்பதாக அமைந்தமையினாலேயே இருவருக்குமிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டன.

இதனால், தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மாகாண முதலமைச்சரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதனை நான் பேசித்தீர்த்துக் கொள்வோம் என கூறியிருந்தேன்.

எனினும், எம்.ஏ.சுமந்திரன் அவுஸ்ரேலியாவுக்கு சென்றபோது ஊடகம் ஒன்றிற்கு அவ்வாறு ஊடகத்தில் பதிலளித்திருக்கக் கூடாது, கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று கூறிய பின்னர் அவர் அதனை ஊடகத்தில் பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கட்சித்தலைமைப் பொறுப்பினை ஏற்கலாம். அது அவரது உரிமை அதனை தீர்மானிப்பது கட்சியும் மக்களுமே நாங்கள் ஆத்திரப்பட வேண்டிய அவசியம் இல்லை. அத்துடன் முதலமைச்சருக்கு ஆதரவாக குப்பைத் தொட்டியில் போடப்பட்ட ஆனந்தசங்கரியும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இருக்கின்றனர். இதனால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.

அவரை முதலமைச்சராக்கியது நான், அவரை முதலில் போய் கேட்டது நான், எமது கட்சி கூடி முதன் முதலாக பேசியபோது அவருக்கு கட்சிக்குள் எவரும் ஆதரவாக இருக்கவில்லை. சேனாதிராஜா மௌனம் சாதித்தார். அவரின் பெருந்தன்மை இறுதி நேரத்தில் அண்ணனின் கருத்தோடு நீங்கள் அனைவரும் ஏற்று வந்தால் அவரைத்தான் நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதன் பின்னர் அனைவரும் கூடி எடுத்த முடிவின் பிரகாரமே நாங்கள் நியமித்தோம். ஆனால் அவர் தற்போது தனி வழியில் போய்க் கொண்டு இருக்கின்றார். நான் அவரை நிறுத்த மாட்டேன். இது மக்களின் முடிவு நான் இந்த பதவியில் இருப்பது மக்களின் முடிவு ஐயா நீங்கள் போக வேண்டும் சி.வி.விக்னேஸ்வரனை நியமிக்கப் போகின்றோம் என்றால் உடனடியாக அதனை நான் ஏற்றுக் கொள்வேன்.” என்றுள்ளார்.

SHARE