ஐ.நா பிரேரணை பாராளுமன்ற அனுமதியின்றி நிறைவேற்றப்படாது! அமைச்சர் ஹர்ஷ டி சில்வா

315
ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையானது பாராளுமன்றத்தின் அனுமதியின்றி முன்னெடுக்கப்பட மாட்டாது என பிரதி வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பிரதமருக்கோ வெளிவிவகார அமைச்சருக்கோ சுயமாக செயற்பட எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. மதத் தலைவர்கள் இணைந்து கருணை சபையொன்றை அமைத்தே முதல் பேச்சு நடத்தப்படும் என அவர் கூறினார்.

வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதியமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

உண்மையை கண்டறிந்து மன்னிப்பு வழங்க நடவடிக்க எடுக்கப்படும். தேவையேற்பட்டால் நஷ்டஈடு வழங்கவும் மீண்டும் அவ்வாறான சம்பவங்கள் நடைபெறாதிருக்கவும் ஆவன செய்யப்படும்.

வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளைத் தனிமைப்படுத்தி வேறு நபர்கள் வெளிநாட்டுப் பயணங்கள் செல்லவில்லை. எமது வெளிநாட்டுக் கொள்கைப் படி எந்த நாடும் எமது எதிரிகளல்ல. அதன்படியே செயற்படுகிறோம்.

வெளிவிவகார அமைச்சுக்கு மத்திய வங்கி, ஜனாதிபதி செயலகம் என்பவற்றினூடாக நிதி செலவிடப்பட்டது. இருந்தும் உலகில் இலங்கை தனிமைப்படுத்தப்பட்டு ஒதுக்கப்பட்டது.

வெளிவிவகார அமைச்சு கடந்த காலத்தில் பல வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பல லட்சம் டொலர்கள் வழங்கியுள்ளது. ஆலோசனை மற்றும் நாட்டின் நற்பெயரை உயர்த்துவதற்கே இவ்வாறு செய்யப்பட்டது.

உலக நாடுகள் எவ்வாறு எமது ஜனாதிபதியை இன்று வரவேற்கின்றனர்.? எமது நாடு குறித்து சர்வதேச கீர்த்தி உயர்ந்து வருகிறது.

ஐ.நா மனித உரிமை பேரவையில் சகல நாடுகளும் எமக்கு ஆதரவாக செயற்பட்டன. பாதாளத்தில் இருந்து எமக்கு வெளிவர முடிந்துள்ளது. உலகில் பல நாடுகளினதும் சந்தைகள் எமக்கு திறந்து விடப்பட்டுள்ளன.

ஜீ.எஸ்.பி பிளசை மீளப்பெற ஐரோப்பிய ஒன்றியத்துடனும் நெருக்கமாக செயற்பட்டு வருகிறோம். எமது சிரேஷ்ட அதிகாரிகள் பிரசல்சில் அவர்களுடன் பேசி வருகின்றனர் என்றார்.

SHARE