பூவைப் போன்ற கதிர்களை பெற்றிருக்கக் கூடிய இந்த கீரை வகையின் தாவர பெயர் செலோசியா அர்ஜென்டியா என்று அழைக்கப்படுகிறது. இதன் இலைகள் நீண்ட வடிவத்தை கொண்டவையாக விளங்குகின்றன. அதன் தண்டுகள் நாயுருவி செடியைப் போன்று காணப்படுகின்றன. அகத்தி மற்றும் வேர்கடலையுடன் ஊடு பயிராகவும் வளர்க்கப்படுகிறது. இந்த பண்ணை கீரை அருமையான உணவாகவும், மருந்தாகவும் பயன்படக் கூடியது.
இந்த கீரை ரத்தத்தை உறைய வைக்கும் பண்பை பெற்றிருக்கிறது. கற்களை உடைத்து கரைக்கும் தன்மை இதற்கு உள்ளது. இதனால் சிறுநீரகங்களில் ஏற்படும் கற்களை கரைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தக் கூடிய தன்மையும் இந்த கீரைக்கு உள்ளது. இதில் காணப்படும் வைட்டமின்கள், தாது உப்புகள், அமினோ அமிலங்கள் அனைத்தும் உடலுக்கு ஊக்கத்தை அளிப்பதாக விளங்குகிறது.
குடலை பலப்படுத்தக் கூடிய மருந்து ஒன்றை பண்ணை கீரையின் இலைகளை பயன்படுத்தி தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் பண்ணை கீரை இலைகள், சோம்பு, பனங்கற்கண்டு. ஒரு பிடி அளவு பண்ணை கீரை இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை ஸ்பூன் சோம்பு, பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் நீர் விட்டு ஒரு கஷாயத்தை தயார் செய்து கொள்ளலாம். இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். வயிற்றில் உள்ள, வாயில் உள்ள புண்களை ஆற்றும் குணமும் பண்ணை கீரைக்கு உள்ளது.
வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியில் தள்ளி விடுவதால், இதை பருகுவதன் மூலம் மலச்சிக்கல் பிரச்னை தீரும். அது மட்டும் இன்றி குடலை பலப்படுத்துவதற்கும் இந்த பண்ணை கீரை மருந்தாகிறது. கேழ்வரகு களியுடன் பண்ணை கீரையை புளியுடன் கடைந்த கடைசலை சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு ஊட்டமும் ஊக்கமும் கிடைக்கிறது. அதே போல பண்ணை கீரையின் பூக்களை பயன்படுத்தி கழிச்சல் மற்றும் பெரும்பாட்டை கட்டுப்படுத்துவதற்கான மருந்தை தயார் செய்யலாம்.
இதற்கு தேவையான பொருட்கள் பண்ணை கீரையின் பூக்கள், பனங்கற்கண்டு. 5 அல்லது 6 பூக்களை எடுத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்க்க வேண்டும். ஒரு டம்ளர் நீர் சேர்த்து தேநீராக்கி தயார் செய்து கொள்ள வேண்டும். இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படக் கூடிய பெரும்பாடு என்கிற பிரச்னை மற்றும் கழிச்சல் எனப்படும் சீத பேதி ஆகியவற்றை கட்டுப்படுத்தும் குணம் இதற்கு உள்ளது. இவ்வாறு பல்வேறு மருத்துவ குணங்களை பெற்றுள்ள பண்ணை கீரையை நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் ஊக்கமும் நலமும் பெறலாம்.