தமிழ் மக்கள் அவையில் கட்சிகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழரசு கட்சியின் தலைவர் அழைக்கப்படாமல் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டமை எதற்காக?
என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தாம் தமிழரசு கட்சி சார்பிலேயே கலந்து கொண்டேன் என தமிழரசு கட்சியின் சிரேஸ்ட உபதலைவர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்திருக்கும் நிலையில்,
;
அவர் தமிழரசு கட்சி சார்பில் கலந்து கொள்ளவில்லை, எமது கட்சிக்கு அவ்வாறான அழைப்பு விடுக்கப்படவில்லை என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் அவை 2ம் நாள் அமர்வு இன்று நடைபெற்றது.
குறித்த அமர்வின் நிறைவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் புளொட், ஈ.பி.ஆர்.எ ல்.எப், தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் தமிழரசு கட்சி சார்பில், அதன் உறுப்பினர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
எனவே கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? கட்சியின் தலைவர் அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் கூட. எனவே அவர் எதற்காக அழைக்கப்படவில்லை என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்குப் பதிலளிக்கும்போது கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக மக்கள் அவை சார்பில் கூறப்பட்டது.
தொடர்ந்து தமிழரசு கட்சி சிரேஸ்ட உபதலைவர் சி.க.சிற்றம்பலம் கருத்து தெரிவிக்கையில்,
தாம் தமிழரசு கட்சி சார்பிலேயே கலந்து கொண்டிருக்கிறேன் என கூறினார்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சி தலைவருமான மாவை சேனாதிராஜாவை தொடர்பு கொண்டு கேட்டபோது தமிழ் மக்கள் அவையிடமிருந்து எமது கட்சிக்கு எந்தவித அழைப்புக்களும் கிடைக்கவில்லை எனவும்,
கட்சி சார்பில் கலந்து கொண்டுள்ளதாக கூறும் சி.க.சிற்றம்பலம் எம்முடன் பேசி எங்களுடைய அனுமதியை பெற்று கலந்து கொள்ளவில்லை என தெரிவித்திருக்கின்றார்.