புதுவருடப் பிறப்பில் சந்திரிக்காவை மறந்தார் மைத்திரி

278
கடந்த காலத்தில் அதிகாரத்தில் இருந்த அனைத்து ஆட்சியாளர்களும் ஒவ்வொரு வகையில் நாட்டுக்கு நல்லதையே செய்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 2016ம் ஆண்டின் புதுவருடப் பிறப்பையொட்டி பொதுமக்களுடன் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு நேற்று பொலன்னறுவையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் இந்நாட்டில் இரண்டு கட்சிகளின் தலைமையிலான அரசாங்கங்கள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. ஆட்சியாளர்களும் மாறியுள்ளனர்.

கடந்த காலத்தில் அவ்வாறு ஆட்சியில் இருந்த அனைத்து தலைவர்களும் நாட்டுக்கு சிறப்பான சேவைகளையே செய்துள்ளனர். ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு வகையில் இந்நாட்டுக்கு சேவையாற்றியுள்ளனர்.

இலங்கையின் முதலாவது பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்க இந்நாட்டை ஒற்றுமைப்படுத்தி, வெள்ளையரின் ஆதிக்கத்திலிருந்து நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்துள்ளார். சுதந்திரக்கட்சியின் ஸ்தாபகரும், முன்னைய பிரதமருமான பண்டாரநாயக்க இந்நாட்டில் நிலவிய குலப்பெருமைகளுக்கு சாவுமணி அடித்து, சாதாரண பொதுமகனும் அதிகாரத்து வருவதற்கான வழியை ஏற்படுத்தி வைத்துள்ளார். முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தனது ஆட்சியில் பொதுச் சொத்துக்களை மக்கள் மயப்படுத்தினார். அதே போன்று இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன அதிகாரத்தைப் பகிர்ந்தளித்து, முன்மாதிரியொன்றை வெளிக்காட்டியிருந்தார். ஜனாதிபதி பிரேமதாசவின் காலத்தில் ஏழைகளின் வறுமை ஒழிப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஜனசவிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே போன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் இந்நாட்டில் நிலவிய உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் நாட்டில் அமைதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஆயினும் நல்லாட்சி மாற்றத்துக்கு முக்கிய பங்களிப்பை நல்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் காலத்தில் நடைபெற்ற சேவைகள் குறித்து ஜனாதிபதி எதுவித கருத்தும் வெளியிடவில்லை என்பதுடன், நாட்டுக்கு சேவையாற்றிய முக்கிய தலைவர்கள் வரிசையில் அவரது பெயரை குறிப்பிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

2151

SHARE