கல்லடியில் வாகன விபத்து – இரு மாணவிகள் உட்பட மூவர் படுகாயம்

285
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடிப்பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வான் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரண்டு பாடசாலை மாணவிகள் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து கல்லடிப் பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கல்லடி, வேலூர் பகுதியில் இருந்து பாடசாலைக்கு மாணவிகள் இருவரை ஏற்றிச்சென்ற மோட்டார் சைக்கிளும், ஆரையம்பதியில் இருந்து பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றி வந்த  வானுமே இவ்வாறு மோதியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையில் க.பொ.த.சாதாரண தரம் கற்கும் மாணவிகளான எஸ்.சப்னா(16வயது),  கே.பஜனா(16வயது) மற்றும் மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்ற குறித்த மாணவிகளின் உறவினரான விநாயகமூர்த்தி(55வயது) ஆகியோரே விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

இவர்களில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், மாணவிகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் விபத்திற்குள்ளான வானை கைப்பற்றியுள்ளதுடன் அதன் சாரதியை கைதுசெய்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

SHARE