இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் டோனிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது தவறானது என்று அவரது வழக்கறிஞர் ரஜ்னிஷ் சோப்ரா கூறியுள்ளார்.கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் மாத பிசினஸ் டுடே பத்திரிகையின் அட்டைப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனியை இந்துக்கடவுள் விஷ்ணு போல் சித்தரித்த படம் வெளியாகியிருந்தது.
அதில் டோனியின் பல கைகளில் அவர் விளம்பரம் செய்யும் பொருட்களுடன் ஷூவும் இருந்தது. இதனால் அந்த விளம்பர படம் சர்ச்சைக்குள்ளாகியிருந்தது. இதைத் தொடர்ந்து விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த ஷியாம் சுந்தர் என்பவர் அந்த பத்திரிகை ஆசிரியர் சைதன்ய கல்பாக் மற்றும் டோனி ஆகியோர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் டோனி ஆஜராகவில்லை. இந்நிலையில் அனந்தபூர் மாவட்ட முதல்தர மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமையன்று டோனி பிணையில் வெளிவரமுடியாத கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. டோனி வழக்கறிஞர் ரஜ்னிஷ் சோப்ரா கூறுகையில், ”இந்த வழக்கில் இதுவரை எந்த சம்மனும் வரவில்லை. இதனால் டோனிக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது தவறானது. அவர் எப்போதும் நீதித்துறையை மதிப்பவர்“ என்று கூறியுள்ளார். மேலும், ”ஏற்கனவே இந்த வழக்கில் பெங்களூர் நீதிமன்ற விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது. இதனால் நாங்கள் உச்சநீதிமன்றத்தை அணுகி உரிய உத்தரவை பெற்றுக் கொள்வோம்” என அவர் தெரிவித்துள்ளார். |