புதிய அரசமைப்பு உருவாக்கப்படுவதன் மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கோ பௌத்த மதத்துக்கோ பாதிப்பு ஏற்படாது.

317

 

புதிய அரசமைப்பு உருவாக்கப்படுவதன் மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கோ பௌத்த மதத்துக்கோ பாதிப்பு ஏற்படாது. இவ்வாறு தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. புதிய அரசமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அலரி மாளிகையில் விசேட உரை ஆற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ranl 7879eeer

அவரது உரையில் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:- புதிய அரசமைப்பை உருவாக்க நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து தமது ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனைவரது யோசனைகளையும் கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டு முன்னோக்கிச் செல்லத் தயாராகவே இருக்கின்றோம். அனைத்து கட்சித் தலைவர்களுடனும் இது தொடர்பில் வெவ்வேறாக பேச்சு நடத்தியுள்ளேன். 21ஆம் நூற்றாண்டுக்குப் பொருந்தக் கூடியவாறான ஓர் அரசமைப்பு முறை உருவாக்கப்பட வேண்டும். இதன் போது அனைத்து தரப்பினரது கருத்துக்களும் யோசனைகளும் உள்வாங்கப்படும் என்றும் கூறினார். புதிய அரசமைப்பு உருவாக்கப்படுவதன் மூலம் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பௌத்த மதத்திற்கு பாதிப்புக்கள் ஏற்பட இருப்பதாக சிலர் பொய்யான பிரசாரங்களை மேற்கொள்கின்றனர். புதிய அரசமைப்பில் உள்ளீர்க்கப்பட வேண்டிய விடயங்களை இனித்தான் மக்கள் கருத்துக்கள் ஊடாக தீர்மானிக்க வேண்டும். அதில் என்ன விடயங்கள் உள்ளடங்கப் போகின்றன என்று எமக்கே தெரியாது. இந்த நிலையில் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பௌத்த மதத்திற்கும் எவ்வாறு பாதிப்பு ஏற்படும் என்று கூறுகின்றார்கள். நான் ஒரு பௌத்தன். அதேபோல் இலங்கையர். இந்த நாட்டை ஒன்றுபடுத்தக் கூடிய தேவை எனக்கிருக்கின்றது. நாட்டை ஒருமைப்படுத்த வேண்டும். அந்த பொறுப்பே ஜனாதிபதிக்கும் எனக்கும் வழங்கப்பட்டுள்ளது. நாட்டை பிரிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன். மூடிய அறை ஒன்றுக்குள் கொண்டு அரசமைப்பை உருவாக்கும் தேவை எனக்கில்லை. தொலைநகல், டுவிட்டர் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் பொதுமக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படவுள்ளன. உலகில் முதல் தடவையாக இவ்வாறு சமூக வலைத்தளங்கள் ஊடாக பொது மக்களின் கருத்துக்கள் பெறப்பட்டு அரசியலமைப்பை உருவாக்கும் நாடாக இலங்கை அமையப் போகின்றது. –

SHARE