சிறுபான்மையினர் ஆதரவின்றி எதையுமே செய்ய முடியாது: லக்ஷ்மன் யாப்பா

266
சிறுபான்மை மக்களது ஆதரவின்றி ஜனாதிபதியாகவோ, அரசு அமைக்கவோ, நாடாளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்தவோ எவருக்கும் முடியாது என்று நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அத்துடன், கட்சியைப் பிளவுபடுத்த முயற்சிப்பவர்கள் எண்ணுபவர்கள் கட்சித் துரோகிகள் என்றும் அவர் சாடினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது:-

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடைவதற்கு கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்கள் விரும்பவில்லை. அவர்கள் கட்சி பிளவுபடாது ஒன்றிணைந்து செயற்படுவதையே விரும்புகின்றனர். எமக்குக் கோரிக்கையும் முன்வைக்கின்றனர்.

கடந்தகால சில துரதிர்ஷ்டவசமான செயற்பாடுகளால் சிறுபான்மை மக்கள் கட்சியை விட்டு தூரமாகியுள்ளனர். அவர்களுக்கு எமது கட்சி மீது நம்பிக்கை ஏற்பட்டு இணைந்து செயற்பட வைப்பதற்கு தற்போதைய தலைவர் மைத்திரிபால சிறிசேனவால் மாத்திரமே முடியும்.

சிறுபான்மை மக்களது ஆதரவின்றி ஜனாதிபதியாகவோ, அரசு அமைக்கவோ, நாடாளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்தவோ எவருக்கும் முடியாது. சு.க. தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சிறுபான்மை மக்களது அங்கீகாரம் உள்ளது.

ஆகவே, எதிர்வரும் தேர்தலை தொகுதிவாரி முறையிலேயே நடத்தவுள்ளோம். நாங்கள் அனைத்து பகுதிகளிலும் எமது அதிகாரத்தை செலுத்தவேண்டுமாயின் சிறுபான்மை மக்களது ஆதரவு எமக்கு அத்தியாவசியமாகின்றது. அதனால் கட்சியைப் பிளவுபடுத்த இடமளிக்க வேண்டாம் என அடிமட்ட தொண்டர்கள் எம்மிடம் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

கட்சியின் தலைமைக்குக் கட்டுப்படவேண்டும். பிரச்சினைகள் இருக்குமாயின் கட்சி மத்திய செயற்குழு மற்றும் நிறைவேற்றுக் குழு என்பவற்றுடன் கலந்தாலோசிக்க வேண்டும். மாறாக, அதன் முடிவுகளுக்கு எதிராக செயற்பட்டு கட்சியைப் பிளவுபடுத்த முனைபவர்கள் கட்சித் துரோகிகள்” – என்றார்.

lakshman-yapa-abeywardana

SHARE