600 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு – வவுனியா சிறையில் இருந்து 14 பேர் விடுதலை

304
நாட்டின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 600 கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளார்.

பாரிய குற்றங்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்படாத , சிறிய குற்றங்களுடன் தொடர்புடைய கைதிகளுக்கே இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் 600 கைதிகள் இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர். இவர்களில் 13 பேர் பெண்கள் என சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

பாலியல் வல்லுறவு சம்பவம், கொள்ளை, திட்டமிட்ட குற்றச் செயல்கள் சம்பந்தமான குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களுக்கு இந்த பொது மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது.

அதேவேளை நாடு முழுவதிலும் உள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை சந்திப்பதற்கு, அவர்களின் குடும்பத்தினருக்கு இன்று சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது.

வவுனியா சிறையில் இருந்து 14 பேர் விடுதலை

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 14 பேர் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

காலை 9.30 மணியளவில் சிறைச்சாலையின் பொறுப்பதிகாரி டபிள்யு.ஜி.ஏ. நிரஞ்சன் பெர்னாண்டோவினால் இந்தக் கைதிகள் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

சிறு குற்றங்கள் மற்றும் அபராதம் செலுத்த முடியாமல் சிறையில் இருந்த 11 ஆண் சிறைக்கைதிகளும் 3 பெண் சிறைக்கைதிகளுமே விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

SHARE