மட்டக்களப்பு நகரில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

288
இலங்கையின் 68வது தேசிய சுதந்திர தினம் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் தமக்கு நீதி வழங்க வேண்டும் எனக்கோரி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காணாமல்போனவர்களின் உறவினர்கள் மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தினர்.

தாயக மக்கள் மறுமலர்ச்சி சங்கம், காந்தி சேவா சங்கம் மற்றும் காணாமல்போனவர்களின் உறவுகள் ஏற்பாட்டில் காந்தி பூங்கா அருகில் இந்த ஆர்பாட்டம் இடம் பெற்றது. ஆர்பாட்டத்தின் போது ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், “தமிழருக்கு ஒரு நியாயமா? நீதி வேண்டும், அரசே எங்கே எமது பிள்ளைகள் கண்டு பிடி. எனது பிள்ளைகளை திருப்பித் தா! என பாதாகைகளை கையில் ஏந்திய வண்ணம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.”

இந்த நாட்டில் ஒவ்வொரு ஆட்சி மாற்றம் வரும்போதும் எமது உறவுகள் வருவார்கள்  சந்தோசமாக இருப்போம் என எதிர்பார்ப்போம்.ஆனால் எந்த ஆட்சி வந்தாலும் நாங்கள் வீதியில் நிற்கவேண்டிய நிலையேற்படுவதாக காணாமல்போனவர்களின் உறவுகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நாட்டில் எந்த நல்லாட்சி ஏற்பாட்டாலும் தமக்கும் தமது குடும்பத்தினருக்கும் எதுவித விமோசனமும் ஏற்படப்போவதில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் ரணில் விக்ரமசிங்க காணாமல்போனவர்கள் உயிரோடு இல்லையென தெரிவித்துள்ளார்.

அது உண்மையான விடயமாக இருந்தால் அவர்களை கொலைசெய்தவர்கள் யார்? அவர்களை கடத்தியவர்கள் யார்? என்ன காரணத்திற்காக கொலைசெய்யப்பட்டார்கள்? அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? என்பதை அவர் வெளிப்படுத்தவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆர்பாட்டத்தில் தாயக மக்கள் மறுமலர்ச்சி சங்கம் மற்றும் காந்தி சேவா சங்கத்தின் தலைவர் ஏ.செல்வேந்திரன்,முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மற்றும் பெருமளவான காணாமல்போன உறவினர்களும் என பலர் கலந்துகொண்டனர்.

SHARE