இலங்கையின் சுதந்திர தினம் கிளிநொச்சியில் துக்கதினமாக அனுஸ்டிப்பு

336
இலங்கையின் 68வது சுதந்திர தினத்தை துக்கதினமாக காணமல்போனோரின் உறவுகள் கிளிநொச்சியில் கடைப்பிடித்துள்ளனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்பாக இன்று காலை தொடக்கம் காணாமல் போனோரின் உறவுகள் கறுப்புத் துணிகளைக் கட்டியவாறும், அரசாங்கத்துக்கு எதிரான சுலோகங்களைத் தாங்கியவாறும், பெரும் சத்தமிட்டு காணாமல் போன தம்பிள்ளைகளின் நிலையை எண்ணி மிகவும் துயரமடைந்த நிலையில் கதறி அழுது தமது எதிர்ப்பினை வெளிக்காட்டியுள்ளனர்.

சுதந்திரக்காற்றை வெறுமனே ஒரு நாட்டினுடைய பெரும்பான்மையினத்தவர் மட்டும் சுவாசிப்பதில்லை.

அந்த நாட்டிலே வாழக்கூடிய அனைத்து இன மக்களும் சுதந்திரக்காற்றை சுவாசிக்க வேண்டும்.

ஆனால் இலங்கையில் முற்று முழுதாக அந்த உரிமைகள் மறுக்கப்பட்ட நிலை கடந்த 68 வருடங்களாக சுதந்திரத்துக்காக ஏங்கி நிற்கும் தமிழ் மக்களாகிய நாங்கள் எவ்வாறு இந்த நாட்டின் சுதந்திர தின நிகழ்வுகளை கொண்டாட முடியும்.

அத்தோடு இதுவரை சரணடைந்ந எம் பிள்ளை களின் நிலை என்ன? எம் மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்களை கொன்று குவித்த ஒரு நாட்டின் சுதந்திர தினத்தை எவ்வாறு கொண்டாட முடியும் என இப்போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர்.

கிளிநொச்சி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களும் காணமல்போனோரின் உறவினர்களின் இப்போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியதோடு, போராட்டத்திலும் கலந்து கொண்டார்.

இதே வேளை இம்மக்களின் அமைதியான போராட்ட நிகழ்வுகளை தொடர்ச்சியாக கண்காணித்தபடி புலனாய்வாளர்கள் இருந்ததனையும் அவதானிக்க முடிந்தது.

நல்லாட்சி அரசாங்கத்தால் மக்களின் கண்ணீருக்கு பதிலளிக்க முடியவில்லை! சிறிதரன்

நல்லாட்சி அரசாங்கத்தால் மக்களின் கண்ணீருக்கு பதிலளிக்க முடியவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.

இன்றைய தினம் கிளிநொச்சியில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் நடத்திய பகிஸ்கரிப்பு அமைதிப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையினுடைய சுதந்திர தினத்தன்று தங்களது சுதந்திரங்களையும் தங்களது பிள்ளைகளையும் இழந்த தாய்மார்கள் கணவன்மாரை ஒப்படைத்த மனைவிமார்கள் தங்களது நிலையை ஒரு அடையாளமாக அரசாங்கத்திற்கு காட்டுவதற்கு இறங்கியுள்ளார்கள்.

கடந்த ஒருவருட காலமாக இவ் மக்களின் கண்ணீருக்கும் துயரத்திற்கும் இவ் நல்லாட்சி அரசாங்கத்தால் பதிலளிக்க முடியவில்லை.

கடந்த 7 வருடங்களாக தமது பிள்ளைகளை கோரி தமிழ் மக்கள் நடத்துகின்ற போராட்டங்களுக்கும் செவி சாய்ப்பதாய் இல்லை.

இன்றைய சுதந்திர தினத்தை ஒரு கறுப்பு நாளாக அல்லது தமக்கு சுதந்திரமற்ற நாளாக கொண்டாடுவதில் எவ்வித பிழையும் இல்லை என எமக்கு தோன்றுகிறது.

இலங்கை என்கிற நாடு கண்ணீர் விட்டு அழுத மக்களுக்கு உறவுகளை தேடிக்கொண்டிருக்கின்ற மக்களுக்கு பதில் சொல்லவேண்டும். இவ் மக்களுக்கு எமது ஆதாரவை வழங்கி உள்ளோம் எனவும் தெரிவித்தார்.

SHARE