திருமலையில் பல கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம்

304
இலங்கையின் 68வது சுதந்திர தினமான இன்று திருகோணமலை மாவட்டத்திலுள்ள பாதிக்கப்பட்ட பல குழுக்கள் இணைந்து பல கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். திருகோணமலையில் ஆளுனர் செயலகத்திற்கு முன்பாக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யுத்தம் நிறைவுக்கு வந்து பல ஆண்டுகள் கழித்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வுகள் கிடைக்கப் பெறவில்லை.

காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் துயரம் நீங்கவில்லை, சம்பூரில் இன்னும் 600இற்கும் அதிகமான குடும்பங்கள் மீள்குடியேற்றப்படாமல் தொடர்ந்து பத்தாவது
வருடமாக முகாம்களில் வாடுகின்றனர்.

கடற்படையினரது கட்டுப்பாட்டினுள் இருக்கின்ற காணிகள் இன்னும் கையளிக்கப்படவில்லை.

அனல் மின் நிலயத்திற்காக ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் காணிகளில் விவசாயிகள் நெற்செய்கையினை மேற்கொள்ள முடியாது என்ற அறிவிப்புக்கள் வெளியாகிய வண்ணமுள்ளன.

கங்குவேலி படுகாடு,  முதலை மடு வயல்காணிகளில் நூற்றுக்கணக்கான விசாயிகளின் தொழில் நடவடிக்கைகள் அத்துமீறல்களால் தடுக்கப்பட்டுள்ளன.

இதேவிதமாக தென்னைமரவாடியிலும் காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. இதேவேளை கரையோரங்களில் உள்ள மீனவர்களின் மீன்பிடி உரிமைகள் மறுக்கப்பட்டு பல இடங்களில் வெளிமாவட்ட மீனவர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

அதற்கான போராட்டத்திற்கான முடிவுகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. புனர்வாழ்வு பெற்ற மற்றும் கைது செய்யப்பட்டவர்களது குடும்பங்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வில்லை.

இவ்வாறான நிலையில் சுதந்திரம் எமக்கு இன்னும் கிடைக்கவில்லை. இதனை சுட்டிக்காட்டும் வகையிலும் அவற்றிக்கான தீர்வை வலியுறுத்தியுமே குறித்த ஆர்ப்பாட்டமானது நடாத்தப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

திருமலையில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

இலங்கையின் 68வது சுதந்திர தினம் இன்றாகும். இதன் திருகோணமலை மாவட்டத்திற்கான நிகழ்வு இன்று காலை திருகோணமலை பிரட்டரிக் கோட்டைக்கு அருகாமையில் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெனேண்டோ தலைமையில் வெகு கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் N.A.A. புஸ்பகுமார, பாராளுமன்ற உறுப்பினர் M.S தௌபீக், பிரதம செயளாளர் D.M. சரத் அபயகுணவர்தன முப்படை அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதன்போது ஆளுனரால் தேசிய கொடி ஏற்றப்பட்டதன் பின்னர் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இலங்கையின் 68வது சுதந்திர தின விழா “ஒரே நாடு – பெரும் சக்தி” என்ற இலக்கை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து கடற்கரையில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மக்களது பல பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை இருப்பினும் முன்னைய காலங்களில் காணப்பட்ட பயங்கரமான சூழல் தற்போது இல்லாது போயுள்ளது.

மக்கள் சுதந்திரத்துடன் வாழ்வதற்கான சூழல் உருவாகியிருக்கின்றது. ஜனாதிபதி மற்றும் பிரதமரது கருத்துக்கிணங்க அனைவரது வாழ்விலும் விடிவு பிறக்கும் அக்காலம் வெகு தொலைவில் இல்லை என தெரிவித்தார்.

SHARE