இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று வெள்ளிக்கிழமை 2 நாள் பயணமாக இலங்கை வருகிறார்.
கொழும்பு நகரில் இன்று நடைபெறும் 9-வது இந்தியா-இலங்கை கூட்டுக்குழு கூட்டத்தில் இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
பொருளாதாரம், வர்த்தகம், மின்சாரம், கடல்சார் ஒத்துழைப்பு, சமூக, கலாசாரம், கல்வி, அறிவியல் தொழில்நுட்பம், இராணுவ ஒத்துழைப்பு, சுகாதாரம், விமான போக்குவரத்து, சுற்றுலா, இருநாட்டு மக்களின் தொடர்புகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இதற்கு முன்பு இரு நாட்டு கூட்டுக்குழு கூட்டம் 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் நடந்தது.
இந்த கூட்டுக்குழு 1992-ம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகளை வளர்க்கவும், பிரச்சினைகளை தீர்க்கவும் உருவாக்கப்பட்டது.
இந்த பயணத்தின்போது சுஷ்மா சுவராஜ் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் உயர்மட்ட தலைவர்களையும் சந்தித்து விரிவாக பேச்சு நடத்தவுள்ளார்.
அதன்போது தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்தும் பேசவுள்ளார்.
முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா-இலங்கை இடையேயான உறவுகள் சரிவடையும் நிலையில் இருந்தது.
ராஜபக்ச சீனாவுடன் நெருக்கமாக இருந்ததால், சீனா இலங்கையில் பல கட்டமைப்பு பணிகளை செய்து கொடுத்தது.
ராஜபக்ச ஆட்சி தோற்கடிக்கப்பட்டதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை சென்றார். அதனைத் தொடர்ந்து இலங்கையுடன் நல்லுறவு தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு வரும் சுஷ்மா சம்பூர் ஒப்பந்தம் உட்பட 5 விடயங்களில் முக்கிய கவனம் செலுத்துவார்!
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று கொழும்புக்கு வருகை தருகின்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சம்பூர் அனல்மின் நிலைய விடயம் உட்பட 5 விடயங்கள் தொடர்பில் முக்கியமாக அவதானம் செலுத்துவார் என கொழும்பைத் தளமாகக்கொண்ட இந்தியாவின் சிரேஷ்ட அரசியல் அவதானியொருவர் தெரிவித்துள்ளார்.
சம்பூர் அனல்மின் நிலையத் திட்டத்தின் தற்போதைய நிலைமை என்ன என்பதை அறிவதில் இந்த விஜயத்தின்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் பெரும் ஆர்வத்தைக் கொண்டிருப்பார் எனத் தெரிவித்த இந்திய அரசியல் அவதானி, சம்பூர் திட்டத்தை நிபந்தனைகளுடன் முன்னெடுக்க தயாராகவுள்ளதாக பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்திருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனைத் தவிர, இலங்கை இந்திய நாடுகளிடையிலான பொருளாதார தொழில்நுட்ப கூட்டுறவு உடன்படிக்கையை விரைந்து கைச்சாத்திடுவதன் அவசியத்தையும் சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தவுள்ளார்.
இவற்றைத் தவிர, மீனவர் விவகாரம் ஐக்கிய நாடுகள் தீர்மான அமுலாக்கம் குறிப்பாக, 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் அவசியம் மற்றும் புகையிரதப்பாதைகள் அமைப்பதற்கான கேள்விப்பத்திர விவகாரம் தொடர்பிலும் சுஷ்மா கவனம் செலுத்துவார் என குறித்த அவதானி மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்திய இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 9ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறவுள்ள நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை தரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இன்று 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்திய இலங்கை கூட்டு ஆணைக்குழு அமர்வுக்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமை தாங்கவுள்ளார்.
இரு நாடுகளுக்கிடையில் காணப்படும் உறவுகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் பொறிமுறையாக 1992ஆம் ஆண்டு இந்திய இலங்கை கூட்டு ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு ஜனவரி 8ஆம் திகதி ஆட்சிமாற்றம் ஏற்பட்டதையடுத்து மார்ச் 6ஆம், 7ஆம் திகதிகளில் இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை இலங்கைக்கு சுஷ்மா சுவராஜ் மேற்கொண்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.