கடற்படையினரின் கல்வீச்சுத் தாக்குதலில் தமிழக மீனவர் பார்வையை இழந்த பரிதாபம்!

268

தமிழக மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் கல்வீசித் தாக்கியதில், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவருக்கு இடது கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தெரியவருவதாவது,

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் முகமது மன்சூர் (42), அப்துல்லா (40), செல்வம் (38) உள்ளிட்டோர் கோட்டைப் பட்டினத்தில் இருந்து நேற்று முன்தினம் புதன்கிழமை பகலில் மீன் பிடிக்கச் சென்றனர்.

இந்திய எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இரவு நேரத்தில் அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் அவர்களைச் சுற்றிவளைத்து கற்கள், போத்தல்களை வீசித் தாக்கியுள்ளனர்.

அதில், முகமது மன்சூரின் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து படகை கரைக்குத் திருப்பிய மீனவர்கள், முகமது மன்சூரை புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இதில், முகமது மன்சூருக்கு கருவிழி முழுமையாக சேதமடைந்திருப்பதால் அவரது இடது கண்ணில் மீண்டும் பார்வை கிடைக்க வாய்ப்புக் குறைவு என மருத்துவர்கள் கூறியதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

அதேவேளை, அன்றைய தினம் இராமேஸ்வரம் பகுதியில் இருந்து  500-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

tamilar_2724894f

மாலையில் கச்சத்தீவு பகுதியில் ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர், 50-க்கும் மேற்பட்ட படகுகளைச் சுற்றி வளைத்து வலைகளை வெட்டி கடலில் வீசினர். பின்னர், இலங்கைக் கடற்படையினர் அங்கிருந்து சென்றதும், மீனவர்கள் கடலில் வெட்டி வீசப்பட்ட வலைகளை சேகரித்துக் கொண்டு நேற்று வியாழக்கிழமை காலையில் இராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.

SHARE