கோறளைப்பற்று பிரதேச செயலாளராக கடமையாற்றும் எஸ்.எம்.எம்.ஸபி என்பவர் கடமை செய்யும் ஊழியர்களை மதிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து செயற்படுவதாகவும் அவருக்கு கீழ் எங்களுக்கு கடமை செய்ய முடியாது என்றும் பிரதேச சபையின் ஊழியர்கள் தெரிவித்தனர்.
பிரதேச சபையில் வீதி தொழிலாளிகள் உட்பட மொத்தமாக எழுபத்திமூன்று பேர், கடமையாற்றுகின்றனர் இவர்களில் பிரதேச சபையில் தினவரவு புத்தகத்தில் கையொப்பம் இடும் உத்தியோகத்தர்கள் இருபத்திமூன்று பேர் இவர்களில் இன்று இருபத்திரெண்டு பேர் கடமைக்காக சமூகமளித்து கையொப்பம் இட்டுள்ள நிலையில் அதில் பத்தொன்பது பேர் பிரதேச சபைக்கு வெளியில் சென்று பிரதேச சபை செயலாளரை இடமாற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதேச சபை செயலாளருக்கும் அங்கு கடமையாற்றும் ஊழியர்களுக்கும் இடையில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக கருத்து முரண்பாடு நிலவி வந்த நிலையில் பிரதேச சபை ஊழியர்கள் இச்சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் ஆகியோருக்கு எழுத்து மூலம் தெரிவித்தும் எந்தப் பலனும் கிடைக்காத நிலையிலயே இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளரை இடமாற்றாத பட்சத்தில் எங்களது போராட்டம் தொடரும் என்றும் பிரதேச சபை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேலிடம் வினவிய போது ஓட்டமாவடி பிரதேச சபையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கும் சபை செயலாளருக்கும் இடையில் நிலவி வந்த முறுகல் நிலை தொடர்பாக கடந்தவாரம் தனக்கு எழுத்து மூலம் கிடைக்கப் பெற்றதற்கிணங்க மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாகவும் அதன் முடிவு கிடைப்பதற்கு முன்னர் பிரதேச சபை ஊழியர்கள் கடமைக்கு சமூகமளித்து தினவரவுப் புத்தகத்தில் கையொப்பமிட்டுவிட்டு அலுவலகத்திற்கு வெளியில் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.