சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்புரிமை பெற சட்டச் சிக்கல் கிடையாது

247
முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள சட்டச் சிக்கல்கள் எதுவும் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.

ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவிற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்புரிமை பெற்றுக்கொள்ள எவ்வித தடையும் கிடையாது.

சரத் பொன்சேகாவிற்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்குவதில் சட்ட சிக்கல்கள் காணப்படுவதாக வார இறுதி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும், அவ்வாறான எந்தவொரு சட்ட சிக்கல்களும் கிடையாது என பெயர் குறிப்பிட விரும்பாத ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவிற்கு நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்குவது குறித்து எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகவும் 9ம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் சரத் பொன்சேகா பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் சாசனத்தின் 91ம் சரத்தில் செயற்பாட்டு ரீதியில் கடமையாற்றி வரும் படையினர் எவரும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது எனவும், பீல்ட் மார்ஷல் பதவி வாழ்நாள் முழுவதும் நீடிக்கப்படும் எனவும் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், பீல்ட் மார்ஷலாக சரத் பொன்சேகாவை நியமிக்கும் நோக்கில் ஜனாதிபதி வெளியிட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் அவ்வாறான விடயங்கள் குறிப்பிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எனவே சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க எவ்வித சட்டத் தடைகளும் கிடையாது என பெயர் குறிப்பிட விரும்பாத ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் சிங்கள இணைய தளமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்

SHARE