நீர்க் கட்டணங்கள் 25 முதல் 30 சத வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
நீர்க் கட்டண திருத்தம் தொடர்பிலான பிரேரணையை திறைசேரிக்கு அனுப்பி வைக்குமாறு திறைசேரி கேட்டுக்கொண்டதற்கிணங்க, தேசிய நீர் வழங்கல் சபை திறைசேரிக்கு கட்டண திருத்தம் தொடர்பிலான பிரேரணையை முன்வைத்துள்ளது.
அந்த யோசனையிலேயே நீர்க் கட்டணம் 25 முதல் 30 சதவீத அதிகரிப்பு தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாடு சென்றுள்ள நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் ரவூப் ஹக்கீம் நாடு திரும்பிய பின்னர் குறித்த யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிய வருகிறது.
அதன் பிரகாரம் ஐந்து ரூபாவாக உள்ள ஒரு யுனிட் ஏழு ரூபாவாகவும் நூற்று நாற்பது ரூபாவாக உள்ள யுனிட் 182 ரூபா வரையிலும் அதிகரிக்கப்படவுள்ளன.
இதேவேளை, மின் கட்டணங்களை அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளதாகவும் தெரியவருகிறது.
இருந்த போதிலும் மின் கட்டணங்களை அதிகரிப்பதா? இல்லையா என்பது தொடர்பில் இம்மாதம் இறுதிப் பகுதியிலேயே தீர்மானிக்கப்படும் எனவும் தெரிய வருகிறது.