சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை குறித்து ஆராய இன்டர்போலின் ஒத்துழைப்பு

246
இலங்கையில் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகின்ற சட்டவிரோத சிறுநீரக சத்திரசிகிச்சை தொடர்பில் ஆராய்வதற்கு இன்டர்போலின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சட்டவிரோத சீறுநீரக சத்திர சிகிச்சை வர்த்தகம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த ஐவர் அடங்கிய குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இந்த விசாரணைகளை நடாத்துவதற்காக சர்வதேச பொலிஸாரின் (இன்டர்போல்) ஒத்துழைப்புக்களையும், இந்திய பொலிஸாரின் ஒத்துழைப்புக்களையும் பெற்றுக் கொள்ளும் வகையில் அரசாங்கம் தலையீடு செய்ய தீர்மானித்துள்ளது.

இந்த விசாரணைகளை துரிதப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சரினால் நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவின் அறிக்கையை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்னவின் ஆலோசனைக்கு அமைய சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபாலவினால் ஜனவரி மாதம் 24ஆம் திகதி ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டு இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இதன்படி, குறித்த குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்ட அறிக்கை கடந்த 5ஆம் திகதி சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்னவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

சுகாதார அமைச்சர் வெளிநாட்டு விஜயமொன்றில் ஈடுபட்டுள்ளமையினால், அவர் மீண்டும் தாயகம் திரும்பியதும், குறித்த அறிக்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இதேவேளை, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபாலவினால் பொலிஸ் மாஅதிபர் என்.கே.இலங்ககோனிடம் செய்யப்பட்ட எழுத்துமூல முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸ் திணைக்களம் நேற்றைய தினம் இந்த விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

இந்த விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் பூஜித்த ஜயசுந்தர பொலிஸ் மாஅதிபரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்பிரகாரம், சுகாதார சேவை பணிப்பாளரிடம் வாக்குமூலமொன்றை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை காணப்பட்டதாகவும், எனினும், அவர் வெளிநாடு சென்றிருந்தமையினால் அவரிடம் நேற்றைய தினமே வாக்குமூலத்தை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஐவர் அடங்கிய குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கடந்த ஆண்டில் மாத்திரம் 800ற்கும் அதிகமான சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன், தனியார் வைத்தியசாலைகளில் இவ்வாறான சத்திர சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் சிலர் அசாதாரணமான தலையீடு செய்ய சந்தர்ப்பங்களும் காணப்பட்டதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

SHARE