பாடசாலையில் நடந்த விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றியபோது மயக்கமுற்ற மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு இறந்தார் என்று செய்தி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இதுபோன்ற ஒரு சில சம்பவங்கள் முன்பும் நடந்ததான தகவல்கள் உள்ளன.
பாடசாலைகளில் நடைபெற்று வரும் மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குபற்றுகின்ற மாணவர்கள் மயக்கமுற்று விழுகின்ற சம்பவங்கள் நடப்பதுண்டு.
எனினும் மயக்கமுற்ற ஒரு மாணவி மரணம் அடைந்தார் என்பது வேதனைக்குரியது.
பொதுவில் எங்கள் பகுதிகளில் மரதன் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றுகின்ற வீர வீராங்கனைகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துகின்ற வழமை இருக்கிறதே தவிர, இல்ல மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குபற்றுகின்ற மாணவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துகின்ற நடைமுறை இல்லை.
எனினும் கொழும்பு போன்ற முக்கிய நகரங்களில் உள்ள பிரபல்யமான பாடசாலைகள் விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றுகின்ற மாணவர்களை முழுமையாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி மருத்துவச் சான்றிதழைப் பெற்ற பின்னரே மாணவர்களை குறித்த போட்டிகளில் பங்குபற்ற அனுமதிக்கின்றன.
இத்தகைய நடைமுறை வடபகுதியிலும் தேவை என்பது உணரப்பட வேண்டும்.
மெய்வல்லுநர் போட்டிக்கு முன்னதாக மாணவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதன் மூலம் மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை அறிந்து கொள்வதுடன், உடல் நலக்குறைவு அல்லது பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால், உரிய சிகிச்சைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.
இதன் மூலம் உயிர்ப் பாதுகாப்பு ஏற்படுவதுடன் மாணவர்கள் கல்விச் செயற்பாட்டிலும் விளையாட்டுத் துறையிலும் ஈடுபடக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.
எனவே, இது தொடர்பில் சுகாதாரத் திணைக்களமும் கல்வித் திணைக்களமும் இணைந்து பொருத்தமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இதற்கு அப்பால் வருடம் தோறும் பாடசாலைகளில் மருத்துவப் பரிசோதனை இடம்பெறுகின்ற நடைமுறை உண்டு.
இந்த நடைமுறையில் மாணவர்கள் தமது பாட சாலைக்காலத்தில் குறைந்தது மூன்று தடவைகள் பரிசோதனைக்கு உட்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.
எனினும் பாடசாலை மருத்துவ பரிசோதனை என்ற விடயத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பிடமும் ஓர் அசமந்தப் போக்கு இருப்பதைக் காண முடிகிறது.
பாடசாலை மருத்துவப் பரிசோதனை என்பது ஏதோ வருடாந்தம் செய்யப்படுகின்ற ஒரு சம்பிரதாய சடங்கு போலவும் அதை செய்து முடித்து விட்டால் எல்லாம் சரி என்பதாகவுமே குறித்த நிகழ்ச்சித் திட்டம் இருப்பதைக் காணமுடிகிறது.
எனவே இத்தகைய நிலைமைகளை மாற்றி பாடசாலை மருத்துவ பரிசோதனையை வினைத்திறன் உடையதாக மாற்றுவதுடன் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றும் மாணவர்களின் உடல் ஆரோக்கியம் தொடர்பில் மருத்துவ பரிசோதனை செய்கின்ற ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதும் அவசியமாகும்.
இவ்வாறான செயற்பாடுகள் அமுலாகும் போது மயக்கமுற்ற மாணவி மரணம் என்பது போன்ற துன்பகரமான சம்பவங்கள் முழுமையாகத் தடுக்கப்படும் என்பதால் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.